India

கட்டைவிரல் தோலை உரித்து இரயில்வே தேர்வில் விரல் மாறாட்டம்.. மோசடி கும்பல் பிடிபட்டது எப்படி ?

இந்திய இரயில்வே சார்பில் டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ் தேர்வு ஒன்றை நடத்தி வந்தது. இந்த தேர்வில் பல்வேறு மாணவர்கள் தேர்வு எழுத வந்தனர். குஜராத்தில் நடைபெற்ற இந்த தேர்வுக்கு, டிசிஎஸ் ஊழியர் அகிலேந்திர சிங் என்பவர் தேர்வு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் தேர்வு நடந்த நாளில் தேர்வு எழுத வந்த தேர்வாளர்களுக்கு கை ரேகை ஸ்கேனிங் நடைபெற்றது. இதில் மனீஷ்குமார் சம்பு பிரசாத் என்பவர் கை ரேகை பதிவு செய்தபோது, அது தவறு என்று வந்தது.

இதனால் முதலில் அந்த மிஷினில் கோளாறு என்று எண்ணிய கண்காணிப்பாளர், அதனை மற்றவருக்கு சோதனை செய்தார். ஆனால் அவர்களுக்கு சரியாக வரவே, மனீஷ்குமார் மீது சந்தேகம் எழுந்தது. பின்னர் அவரது கை விரல்களை சோதனை செய்தபோது, அவரது கட்டை விரலில் தோல் ஒட்டியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கையும்களவுமாக பிடிபட்ட மனீஷை கண்காணிப்பாளர்கள் காவல்துறையில் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் மேற்கொண்ட விசாரணையில், மனீஷ், ராஜ்யகுரு குப்தா என்பவருக்கு பதிலாக தேர்வு எழுத வந்ததை ஒப்புக்கொண்டார்.

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், "தேர்வாளர்கள் தேர்வு எழுத வரும் முன், அவர்கள் ஹால் டிக்கெட் சரி பார்க்கப்படும் போது, இவர் மேல் யாருக்கும் சந்தேகம் எழவில்லை. ஆனால் அதன் பிறகு நடைபெற்ற இரண்டாம் கட்ட சோதனையில் இவரது கட்டை விரல் பயோ மெட்ரிக் மிஷினில் பதியவில்லை. ஆனால் மற்ற தேர்வாளர்களுக்கு பதிந்தது.

பின்னர் 30 நிமிடங்களுக்கு பிறகு அதிகாரிகள் மீண்டும் முயற்சித்தனர்; ஆனால் அப்போதும் இவரது ரேகை பதியவில்லை. பின்னர் சானிடைசரை இவரது கையில் தடவிய போது தான், மனிஷின் கையில் வேறொருவருடையே கைரேகை தோல் ஒட்டியிருந்தது தெரியவந்தது. தற்போது ஆள்மாறாட்டம் செய்த மனீஷ் மற்றும் ராஜ்யகுரு குப்தா மீது ஐபிசி 419, 464, 465, 468 மற்றும் 120(பி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது உண்மையாக தேர்வு எழுதவேண்டியவரிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்படவுள்ளது. போலி நபரின் கட்டை விரலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட தோல் மாதிரியை, தடயவியல் மற்றும் அறிவியல் ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது" என்றனர்.

மேலும் "தேர்வு எழுத வந்த போலி நபரான மனீஷும், உண்மையாக தேர்வு எழுதவேண்டிய ராஜ்யகுருவும் பீகாரில் ஒரே கிராமத்தில் வசிப்பவர்கள். ராஜ்யகுரு தனது கட்டைவிரலை சூடான தோசைக் கல்லில் வைத்ததால், அவரது கட்டைவிரலில் ஒரு பெரிய கொப்பளம் ஏற்பட்டது. அதை உடைத்து அந்ததோல் மூலம் கைரேகை தோலை உருவாக்கியுள்ளனர். இந்த செயல்பாட்டில் எந்த நிபுணரின் உதவியும் பெறப்படவில்லை" என்றும் தெரிவித்தனர்.

Also Read: "வேணும்னா எங்க கம்பெனியில் வேலை வாங்கி தாரேன்.. வாங்க" - எச்.ராஜாவுக்கு பதிலடி கொடுத்த செய்தியாளர்!