India

சொத்துக்காக தாயையே துடிக்க துடிக்க கொலை செய்த கொடூர மகள்.. - கேரளாவில் அதிர்ச்சி !

கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை அடுத்துள்ள கீழூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ருக்மணி - சந்திரன் தம்பதியினர். இவர்களுக்கு இந்துலேகா என்ற ஒரு மகள் இருக்கும் நிலையில், மகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில், இவர் தனது பெற்றோர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட இந்துலேகா, அதற்காக பல்வேறு விஷயங்களை செய்து வந்துள்ளார். அந்த வகையில், தனது நகைகளை 8 லட்ச ரூபாய்க்கு அடமானம் வைத்து மகிழ்ச்சியாக இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டிலிருந்து இவரது கணவர் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது இந்துலேகாவிடம் நகைகள் பற்றி விசாரித்துள்ளார். அப்போது அவர் ஏதோதோ சொல்லி சமாளித்துள்ளார். பின்னர் அடமானம் வைத்திருந்த நகைகளை எப்படி மீட்கலாம் என்பது குறித்து யோசித்த இவர், தனது தந்தை வைத்திருந்த 14 ஏக்கர் நிலத்தை விற்க முடிவு செய்துள்ளார்.

ஆனால் அது தனது பெற்றோர்கள் உயிருடன் இருக்கும் வரையில் நடக்காது என்பதை உணர்ந்த இந்துலேகா, அவர்களை கொல்ல திட்டமிட்டுள்ளார். அதன் படி கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி தனது பெற்றோர்களுக்கு கொடுக்கும் டீ-யில் எலி மருந்து கலந்து கொடுத்துள்ளார். அதனை வாங்கிய தந்தை எதோ நாற்றம் அடிப்பதாக கூறி குடிக்காமல் விட, தாயோ அதனை பருகியுள்ளார்.

இதில் தாய் சம்பவ இடத்திலேயே மயங்கி கீழே விழ, இதனை பார்த்த தந்தையும் இந்துலேகாவும் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே அவரை மருத்துவர்கள் பரிசோதித்தபோது, அவருக்கு மஞ்சள் காமாலைக்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது தாய்க்கு நடத்திய உடற்கூராய்வில், அவருக்கு எலி மருந்து கொடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க, விரைந்து வந்த அவர்கள், விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது மகளின் நடைபெற்ற விசாரணையில் அவர் தனக்கும் இதற்கும் சம்மந்தமில்லை என்று கூறிவந்துள்ளார். இதையடுத்து அவரது மொபைல் போனை பரிசோதித்த போது, கூகுளில் விஷம் பற்றி தகவல்களை தேடியுள்ளது தெரியவந்தது. பின்னர் அவரிடம் காவல்துறை நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், சிறையில் அடைத்தனர். சொத்துக்காக சொந்த தாயையே மகள் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: WHATSAPP-ல் வந்த LINK.. ஒரே ஒரு கிளிக் செய்ததால் 21 லட்சத்தை இழந்த பெண்.. பின்னணி என்ன ?