India

"மாணவிகளை Shift போட்டு வீட்டு வேலை செய்ய சொன்ன ஆசிரியை.." - பாஜக ஆளும் மாநில பள்ளிகளின் அவலம் !

கர்நாடக மாநிலம் துமகுரு பகுதியில் மொரார்ஜி தேசாய் என்ற பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு பணியாற்றும் பெண் ஆசிரியர் ஒருவர், மாணவிகளை தனது சொந்த வேலைக்காக பயன்படுத்தி வந்துள்ளார்.

அந்த வகையில் 10-ம் வகுப்பு மாணவிகளை தனது வீட்டில் வந்து வேலை செய்ய ஆசிரியர் உத்தரவிட்டிருந்தார். இதனால் மாணவிகள் இது குறித்து தலைமையாசிரியரிடம் புகாரளித்தனர். ஆனால் அவரோ கண்டுகொள்ளாமல் இருந்ததால் இந்த சம்பவம் குறித்து சமூக நலத்துறை இணை இயக்குநரிடம் புகார் அளித்தனர்.

இதையடுத்து சம்பவத்தன்று திடீரென்று ஆசிரியர் வீட்டில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், அங்கு மாணவிகளை கண்டுள்ளனர். மேலும் ஆசிரியர் வீட்டில் மாணவிகள் சிலர் துணி துவைத்தும், சாப்பிட்ட பாத்திரங்களை விலக்கி கொடுத்தும், சமைத்தும், வீட்டை துடைத்தும், அவரின் கைக்குழந்தையை கவனித்தும் கொண்டிருந்தனர்.

இதனை கண்ட அதிகாரிகள் ஆசிரியரை கையும் களவுமாக பிடித்தனர். அதோடு மாணவிகளிடமும் விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் கூறும்போது, "ஆசிரியர் எங்களை வீட்டு வேலைக்காக தினமும் பயன்படுத்திக் கொள்வார். அதுவும் shift முறையில் வேலை செய்ய சொல்வார்; வகுப்பிற்கும் சரியாக வரமாட்டார். இது குறித்து வெளியே யாரிடமாவது கூறினால் மதிப்பெண்ணை குறைத்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்" என்று கண்ணீர் மல்க கூறினர்.

இதையடுத்து பள்ளி மாணவிகளை தனது வீட்டு வேலைக்காக பயன்படுத்திய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கர்நாடக பள்ளிகல்வித்துறைக்கு சமூக நலத்துறை அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். மேலும் இது குறித்து பெற்றோர்களும் பள்ளியில் புகார் தெரிவித்துள்ளனர். மாணவிகளை ஆசிரியரே shift முறைப்படி வீட்டு வேலை செய்ய வற்புறுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Also Read: 'இந்த சமூகம் தவறாகதான் இருக்கிறது?" - மாணவி எழுப்பிய கேள்விக்கு திமுக எம்.பி. கனிமொழி தெளிவான விளக்கம் !