India

"என் மகனின் காரை நாய்கள் குரைத்தபடி துரத்தியிருக்கின்றன" - விவசாயிகளை நாய்கள் என கூறிய பா.ஜ.க அமைச்சர் !

கடந்த 2020ம் ஆண்டு பா.ஜ.க அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாட்டின் பல்வேறு பகுதியில் போராட்டம் நடைபெற்றது.

அதன் ஒருபகுதியாக உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகளின் பேரணி நடைபெற்றது. அப்போது அங்கு போராடிய விவசாயிகள் மீது பா.ஜ.க ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா, கார் ஏற்றிய சம்பவத்தில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உட்பட 9 உயிரிழந்துள்ளனர்.

இந்தக் கொடூர சம்பவம் நாட்டையே அதிர்ச்சியடையச் செய்தது.இந்தச் சம்பவத்துக்குப் பிறகு வெடித்த வன்முறையில் மேலும் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.அதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் அஜய் மிஸ்ராவுக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

இந்த நிலையில் அஜய் மிஸ்ரா செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது பேசிய அவர், " என் மகனின் காரை நாய்கள் குரைத்தபடி துரத்தியிருக்கின்றன. உதாரணமாக, நான் லக்னோவுக்கு, நல்ல வேகத்தில் காரில் பயணம் செய்கிறேன்.சாலையில் நாய்கள் குரைக்கின்றன அல்லது காரைத் துரத்துகின்றன என்று வைத்துக்கொள்வோம். இது அவைகளின் இயல்பு. அதைப் பற்றி நான் எதுவும் சொல்ல மாட்டேன். விவசாயிகளின் தலைவர் ராகேஷ் திகாட்டி எதற்கும் பயனற்றவர். அவர் இரண்டு தேர்தல்களில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தவர்.” என்று கூறியுள்ளார். அவரின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ஷாப்பிங் அழைத்துச்செல்லாத பெற்றோர்.. விரக்தியில் விபரீத முடிவெடுத்த 11 வயது சிறுமி ! நடந்தது என்ன ?