India

12 வயது சிறுமியாக இருக்கும்போது பாலியல் வன்கொடுமை.. 30 ஆண்டுகளுக்கு பின்னர் புகார்.. உதவிய மகனின் DNA !

உத்தரப் பிரதேச மாநிலம், ஷாஜகான்பூரை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் 30 வருடங்களுக்கு முன்னர் சில இளைஞர்களால் பாலியல் வன்கொடுமை செய்யபட்டார். தொடர்ந்து இந்த வன்கொடுமை நடைபெற்ற நிலையில், அந்த சிறுமி கருவுற்றுள்ளார்.

தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு கருக்கலைப்பு செய்தால் உயிருக்கு ஆபத்து என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் வேறு வழியின்றி குழந்தையை அவர் பெற்றுள்ளார். குழந்தை உறவினர்களிடம் வளர்ந்து வந்த நிலையில், அந்த சிறுமி தொடர்ந்து படித்துள்ளார்.

சிறுமிக்கு 18 வயது நிறைவடைந்த நிலையில், அவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. பின்னர் அவருக்கு நடந்த துயர சம்பவம் குறித்து அவரின் சகோதரருக்கு தெரியவந்துள்ளது. இதனால் கணவர் அவரை விவாகரத்து செய்துள்ளார்.

இந்த சம்பவத்துக்கு பின்னர் அந்த பெண் பாலியல் வன்கொடுமையால் பிறந்த தனது மகனை சந்தித்துள்ளார். அதன் பின்னர் மகனின் வற்புறுத்தல் காரணமாக சம்பவம் நடந்து 30 ஆண்டுகளுக்கு பின்னர் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்ற நிலையில், சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலிஸார் கைது செய்தனர். பின்னர் அதில் ஒருவரின் DNA-வையும், அந்த பெண்ணின் மகனின் DNA-வையும் சோதனை செய்ததில் பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது. இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: ‘அட்ஜெஸ் பண்ணிக்கோ’ - 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தாய் உட்பட 2 பேர் கைது : ‘பகீர்’ தகவல்!