India

59 வயது தாய்க்கு 2வது திருமணம் செய்து வைத்த மகள்கள்.. கேரளாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் ரதிமேனன். இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது இரண்டு மகள்களும் திருமணமாகி அவர்களது கணவர் வீட்டில் விசித்து வருகின்றனர்.

இதனால் 59 வயதாகும் ரதிமேனன் தனியாக வசித்து வந்துள்ளார். இவரின் மகள்களால் அடிக்கடி வந்து அவரை பார்த்துக்கொள்ள முடியவில்லை. மேலும் தங்கள் தாயின் தனிமையை மகள் இருவரும் உணர்ந்துள்ளனர்.

இதையடுத்து தாய்க்கு 2வது திருமணம் செய்து வைக்க மகள்கள் முடிவு செய்துள்ளனர். பின்னர் அவருக்கு ஏற்ப மணமகனையும் தேடிவந்தனர். அப்போது அதேபகுதியைச் சேர்ந்த மனைவியை இழந்த திவாகரன் என்பவரிடம் தங்களது தாயை 2வது திருமணம் செய்து கொள்ள முடியுமா என கேட்டுள்ளனர்.

இதற்கு அவர் சம்மதம் தெரிவித்துள்ளார். அதேபோல் ரதிமேனனும் திருமணத்திற்குச் சம்மதித்துள்ளார். இதையடுத்து இரண்டு வீட்டு உறவினர்கள் முன்னிலையில் திருச்சூர் திருவம்பாடி கோயிலில் இவர்களது திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணம் குறித்துப் பேசிய அவரது மகள்கள், "அம்மாவுக்கு நாங்கள் 2 பெண் குழந்தைகள். அப்பா உயிரோடு இருக்கும்போதே எங்கள் இருவருக்கும் திருமணமாகிவிட்டது. நாங்கள் அவரவர் கணவர் வீட்டில் வாழ்ந்து வருகிறோம். அப்பா மரணமடைந்த பிறகு அம்மா தனிமையானார்.

எனவே அம்மாவின் தனிமையைப் போக்க வேண்டும் என யோசித்து அவருக்குத் திருமணம் செய்து வைத்தோம்" என தெரிவித்துள்ளார். 59 வயதாகும் தனது தாய்க்கு மகள்கள் 2வது திருமணம் செய்து வைத்தது அனைவரையும் நெகிழவைத்துள்ளது.

Also Read: இனி Gpay, Phonepe போன்ற சேவைகளுக்கும் கட்டணம்? .. RBI முடிவால் பொதுமக்கள் அதிர்ச்சி!