India

'6 மாளிகை, தனி தியேட்டர், 16 லட்சம் ரொக்கம்' -RTO வீட்டில் நடத்திய ரெய்டில் அதிசயித்து போன அதிகாரிகள் !

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் மண்டல போக்குவரத்து அதிகாரியாக (RTO) இருப்பவர் சந்தோஷ் பால். இவரும், இவரது மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பொருளாதார குற்றத் தடுப்பு அதிகாரிகளுக்கு புகார் சென்றது. புகாரின் அடிப்படையில் பொருளாதார குற்றத் தடுப்பு அதிகாரிகள் இவரது வீட்டில் கடந்த புதன்கிழமை சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அவரது வீட்டில் இருந்து பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவரது வீட்டில் இருந்து 16 லட்சம் ரொக்கப் பணம், இரண்டு சொகுசு கார்கள், விலை உயர்ந்த இருசக்கர வாகனம், ஏராளமான நகைகள் உள்ளிட்டவையும் சிக்கின.

இதையடுத்து தொடர்ந்து சோதனை செய்தபோது அவர்களது பெயரில் 6 சொகுசு பங்களா, 2 சொகுசு கார்கள், வீட்டுக்குள்ளேயே திரையரங்கு, பண்ணை வீடு, நீச்சல் குளத்துடன் 10000 சதுர அடியில் மாளிகைப் போன்ற வீடு இருந்ததும் தெரியவந்தது.

இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த சோதனையில் RTO அதிகாரி மற்றும் அவரது மனைவி தங்களது வருமானத்தை விட சுமார் 650 மடங்கு அதிகமாக சொத்துக் குவித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு RTO அதிகாரி வீட்டில் இவ்வளவு பொருட்கள் சிக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.