India

கண்டெய்னர் லாரி மீது மோதிய கார்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 வயது குழந்தை உட்பட 5 பேர் பலி!

ஹைதராபாத் பேகம் பெட் பகுதியைச் சேர்ந்தவர் கிரிதர். அவரது மனைவி அனிதா. இந்த தம்பதியின் 2 வயது மகன் மயங்க் மற்றும் மகள் பிரியங்கா, மூத்தமகன் ஹர்ஷவர்த்தன் ஆகிய அனைவரும் ஹைதராபாத்திலிருந்து கர்நாடக மாநிலம் கலபுர்கியில் உள்ள கங்காபூர் கோவிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.

இந்த காரை ஹைதராபாத்தில் தலைமைக் காவலராக இருக்கும் பேகம் பேட்டாவைச் சேர்ந்த தினேஷ் என்பவரை ஓட்டி சென்றுள்ளார். இதையடுத்து கர்நாடக மாநிலம் பிதார் தாலுகாவில் உள்ள பங்கூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது கார் திடீரென சாலையில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதியுள்ளது.

இதில் காரின் முன்பகுதி முழுவதுமாக நொறுங்கியுள்ளது. இந்த விபத்தில் உடல் நசுங்கி கிரிதர், அனிதா, பிரியங்கா, கார் ஓட்டுநர் தினேஷ் ஆகிய நான்குபேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் பலத்த காயத்துடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் 2 வயது குழந்தை மயங்க் உயிரிழந்துள்ளார்.

மேலும் பலத்த காயத்துடன் கிரிதரின் மகன் ஹர்ஷவர்தன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கோர விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடகாவில் சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ஆற்றில் கவிழ்ந்த ராணுவ பேருந்து.. 6 வீரர்கள் பலி: 30 பேர் படுகாயம்: விபத்திற்கு காரணம் என்ன?