India

2 மாதத்தில் ரூ.1.2 லட்சம் கோடியை இழந்த LIC..30% சரிந்த பங்குகள்.. பாஜக அரசின் முடிவால் நேர்ந்த பரிதாபம்!

நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை பெரு முதலாளிகளுக்கு தாரைவார்க்கும் வகையில், அரசு நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பது, ஒட்டுமொத்தமாக தனியார் வசம் ஒப்படைப்பது என பல்வேறு வகையில் தனியார்மயமாக்கலை ஊக்குவித்து வருகிறது மோடி அரசு.

குறிப்பாக, பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகளை விற்பதன் மூலமாக 2.1 லட்சம் கோடி வருவாய் ஈட்டப் போவதாக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்லி இருக்கிறார். அரசுக்கு இருக்கும் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதை தங்கள் வழக்கமாக வைத்துள்ளார்கள் ஒன்றிய ஆட்சியாளர்கள்.

இதன் தொடக்கமாக கடந்த 2021 பிப்ரவரி 1 ஆம் நாள் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அரசிடம் உள்ள எல்.ஐ.சி.யின் 100 சதவிகிதப் பங்குகளின் ஒரு பகுதியை தனியாருக்கு விற்கப் போவதாக அறிவித்தார்.

அதோடு அல்லாமல், இதற்கான பொதுக்காப்பீட்டுத் திட்ட மசோதாவை கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 2 அன்று நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றியது ஒன்றிய பா.ஜ.க அரசு. மேலும் எல்.ஐ.சி பங்குகளை விற்பதற்கு இந்திய காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி கொடுத்தது.

அதன்படி, அரசிடம் இருந்த 4.99 சதவிகித பங்குகள் விற்கப்பட்டது. மே 4-ம் தேதி தொடங்கி மே.9 ஆம் தேதி வரை வரை நடைபெற்ற இந்த விற்பனையின்போது எல்.ஐ.சி.யின் பங்கு விலைகள் ரூ.902-949 என்ற கணக்கில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து எல்.ஐ.சி.யின் பங்குகள் மே 12-ம் தேதி பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டமுதல் நாளிலே கடும் சரிவை சந்தித்த நிலையில், அது தொடர்ந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஜுன் மாதம் இறுதியில் நிதியாண்டின் முதல் காலாண்டு நிறைவடைந்தபோது எல்.ஐ.சி.யின் பங்கின் விலை ரூ. 661 ஆக சரிந்தது. இதன்மூலம் 2 மாதங்களை நிறைவு செய்வதற்குள் 30 சதவீத சரிவை எல்.ஐ.சி சந்தித்துள்ளது. பங்குசந்தையில் பட்டியலிடப்படும்போது எல்.ஐ.சி.யின் மதிப்பு ரூ.6 லட்சம் கோடியாக இருந்த நிலையில் தற்போது அதன் மதிப்பு ரூ.4.8 லட்சம் கோடியாக சரிந்துள்ளது. இதன்மூலம் இரண்டே மாதத்தில் ரூ.1.2 லட்சம் கோடியை எல்.ஐ.சி நிறுவனம் இழந்துள்ளது.

இந்த தகவல் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் நம்பிக்கை மற்றும் சேமிப்பின் உதவியால் மிகபெரிய அளவில் வளர்ச்சி பெற்ற எல்.ஐ.சி தற்போது பா.ஜ.க அரசின் தவறான பொருளாதார கொள்கையால் தவறு செய்யாமலே பெரும் இழப்பை சந்தித்துள்ளது.

Also Read: வங்கியில் 32 கிலோ தங்க நகை கொள்ளை: சினிமா பார்த்து கொள்ளை அடித்தவர்களை 2 நாளில் கைது செய்த தமிழக போலிஸ்!