India

தீண்டாமை கொடுமையின் உச்சம் : குடிநீர் பானையை தொட்ட பட்டியலின மாணவன்.. அடித்தே கொன்ற ஆசிரியர் !

ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் பகுதியை அடுத்துள்ள சிறு கிராமத்தை சேர்ந்தவர் 9 வயது சிறுவன் இந்திர மேக்வல். பட்டியலின சமூகத்தை சேர்ந்த இந்த சிறுவன், அங்கிருக்கும் ஒரு பள்ளியில் படித்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திர மேக்வல் தனக்கு தாகமாக இருப்பதாக கூறி வகுப்பறையில் இருந்த பானையில் தண்ணீர் எடுத்து குடிக்க முயன்றுள்ளார். அப்போது அந்த சிறுவன் பானையை தொட்டுள்ளார்.

இதனை கண்ட அந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஷாயில் சிங் (வயது 40) என்பவர் அந்த மாணவனை பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் பானையை தொடலாமா என்று வசைபாடியுள்ளார். மேலும் அந்த மாணவனை கடுமையாக தாக்கியும் உள்ளார்.

ஆசிரியர் தாக்கியதில் அந்த மாணவனுக்கு முகம், காது, கண் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதோடு, சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்தார். இதையடுத்து மாணவர் மேக்வல் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அந்த மாணவன் மேல்சிகிச்சைக்காக உதய்ப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அம்மாநில முதல்வர், இதற்கு காரணமானவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Also Read: ’இத நாய் கூட சாப்பிடாது' கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட போலிஸ் மீது நடவடிக்கை : தொடரும் யோகி அரசின் அராஜகம்!