India

மகளை விஷ ஊசி போட்டு கொல்ல முயற்சி.. ரூ.10 லட்சம் பேரம் பேசிய கொடூர தந்தை.. வெளிவந்த அதிர்ச்சி காரணம் !

உத்தரப்பிரதேச மாநிலம், மீரட்டை சேர்ந்த 17 வயது சிறுமி வீட்டின் மாடியில் விளையாடிக்கொண்டிருந்தபோது அங்கிருந்து கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை மீரட்டில் உள்ள கன்கெர்கெடா பகுதி மருத்துவமனை ஒன்றில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு அவர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவர் இருந்த அறை அருகே மருத்துவர்போல வேடமணிந்த ஒருவரை மருத்துவமனை ஊழியர்கள் பிடித்துள்ளனர். பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.

அவர் கூறிய தகவலின்படி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 17 வயது சிறுமி ஒரு இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் அந்த பெண்ணின் தந்தைக்கு பிடிக்காமல் இருந்துள்ளது. இது குறித்து அவர் பலமுறை கண்டித்தும் அவரது மகள் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்.

மகளின் காதலினால் அவரது கௌரவத்துக்கு பாதிப்பு வரும் என்று நினைத்த அவரது தந்தை மகளை கொல்ல முடிவெடுத்துள்ளார். இந்த தருணத்தில் மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் இதை சாதகமாக எடுத்துக்கொண்டு அவரை கொலைசெய்ய திட்டமிட்டுள்ளார்.

அதன்படி மகள் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் கம்பவுண்டராக பணிபுரியும் தனது பக்கத்து வீட்டுக்காரரை இவர் அணுகியுள்ளார். மகளை விசஊசி போட்டு கொலைசெய்தால் 10 லட்சம் ரூபாய் தருவதாக பேரம்பேசியுள்ளார். மேலும் முன்பணமாக 1 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார்.

காசை வாங்கிய பக்கத்து வீட்டுக்காரர் அந்த பெண் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் செவிலியர்கள் உதவியுடன் டாக்டர் போல வேடமணிந்து உள்ளே சென்றுள்ளார். பின்னர் அந்த பெண்ணுக்கு விஷ ஊசி செலுத்தி வெளியே வரும்போது அங்குள்ளவர்களிடம் சிக்கியுள்ளார். மருத்துவமனை ஊழியர்கள் அவரை போலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து குற்றவாளிகள்மீது கீழ் வழக்கு பதிவுசெய்த போலிஸார் இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர். விஷ ஊசி செலுத்தப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் நிலையில் அவர் உயிருக்கு ஆபத்தில்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Also Read: காதலனுக்கு வந்த AIDS .. காதலை நிரூபிக்க அவரின் ரத்தத்தை தனக்குள் செலுத்திக்கொண்டு சிறுமி !