India

வெறும் 5 ரூபாய்க்காக வந்த சண்டை.. ஓடும் இரயிலில் இருந்து பயணியை தள்ளிவிட்ட ஊழியர்.. உ.பி.யில் அதிர்ச்சி !

உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ரவி யாதவ் (வயது 26). இவர் கடந்த சனிக்கிழமை அவரது சகோதரியுடன் ரப்திசாகர் எக்ஸ்பிரஸ் இரயிலில் பயணித்தார். அப்போது அந்த இரயில் ஜிரோலி கிராமம் அருகே வந்தபோது, தாகமாக இருந்ததால் இரயில்வே உணவு வியாபாரி ஒருவரிடம் தண்ணீர் பாட்டில் ஒன்று வாங்கியுள்ளார்.

அந்த தண்ணீர் பாட்டில் விலை ரூ.15 ஆக இருக்கும் நிலையில், அந்த வியாபாரி ரூ.20 கேட்டுள்ளார். இதற்கு கொடுக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளார் ரவி யாதவ். இதனால் அவர்கள் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே அந்த ஊழியர் பாண் மசாலா போட்டுகொண்டு இரயிலுனுள்ளே துப்பிக்கொண்டிருந்தார். இது குறித்தும் ரவி அந்த நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதையடுத்து ரவி இறங்கக்கூடிய லலித்பூர் பகுதி இரயில் நிலையம் வந்ததும், அவர் அவரது சகோதரியுடன் இரயிலை விட்டு இறங்க முயற்சித்துள்ளார். அந்த சமயத்தில் தன்னுடன் பணிபுரியும் ஊழியர்கள் சிலரை அழைத்துக்கொண்டு வந்த அந்த ஊழியர், ரவியை இறங்கவிடாமல் வழிமறித்துள்ளார். இதையடுத்து இரயில் புறப்பட்டதும் ரவியிடம் சண்டையிட்டு அவரை ஓடும் இரயிலில் இருந்து தள்ளிவிட்டுள்ளனர் அந்த கும்பல்.

ஓடும் இரயிலில் இருந்து கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த ரவியை அங்கிருந்தவர்கள் ஜான்சி மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவம் குறித்து அவரது சகோதரி காவல்துறையில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் இரயில் ஊழியர்கள் ஐ.பி.சி 323 (தன்னிச்சையாகக் காயப்படுத்துதல்), 325 (கடுமையான காயத்தை ஏற்படுத்துதல்) மற்றும் 506 (குற்றவியல் மிரட்டல்) ஆகிய பிரிவுகளின் கீழ் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் அதில் அமித் என்ற நபரை கைது செய்ததோடு மற்ற குற்றவாளிகளை காவல்துறை தீவிரமாகத் தேடிவருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: சேலத்தில் கஞ்சா விற்பனை.. Door Delivery செய்து வந்த அதிமுக நிர்வாகி அதிரடி கைது !