India

ஆட்சியமைத்து 1 மாதம் ஆகியும் பதவியேற்காத அமைச்சர்கள்.. பா.ஜ.க. அரசியலில் சிக்கித்தவிக்கும் மகாராஷ்டிரா !

மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தது. அதன் முதல்வராக உத்தவ் தாக்கரே இருந்து வந்தார். ஆனால் சிவசேனாவின் இருந்த அதிருப்தி அமைச்சரான ஏக்நாத் ஷிண்டேவை வைத்து பா.ஜ.க அரசியல் ஆட்டம் ஆடியது.

சிவசேனா எம்.எல்.ஏக்களை வளைத்த ஏக்நாத் ஷிண்டே, அவர்களை அசாம் அழைத்து சென்று தங்க வைத்து அரசுக்கு நெருக்கடி கொடுத்தார். இதைத் தொடர்ந்து உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கவிழ்ந்தது.

அதன்பின்னர் ஏக்நாத் ஏக்நாத் தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்களை வைத்து பாஜக ஆட்சிக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில் ஏக்நாத் ஷிண்டேவே முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். துணை முதல்வர் பதவி பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ்க்கு வழங்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் புதிய அரசு பதவியேற்று ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்ட நிலையில், இன்னும் அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. இதனால் அரச நிர்வாகம் முற்றிலும் முடங்கியுள்ளது.

அதேநேரம் அரசு பதவியில் இருக்கும் துணை முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் பா.ஜ.க மூத்த தலைவர்களை சந்திக்க டெல்லி சென்றுள்ளார். முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அரச நிர்வாகம் மொத்தமாக ஸ்தம்பித்துள்ளது.

அமைச்சர்கள் இல்லாத நிலையில், அலுவலர்கள் துறையை நடத்தி வருவதாக முதல்வர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அதுல் லோண்டே, ``அமைச்சர்கள் இல்லை என்பதற்காக அதிகாரிகளை கொண்டு நிர்வாகத்தை நடத்த அரசு முடிவு செய்திருப்பது தவறு" என்று தெரிவித்துள்ளார். இது போன்ற சூழலால் மஹாராஷ்டிராவில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Also Read: உடல் நலம் தேறி வந்த இயக்குநர் சீனிவாசன்.. முத்தமிட்டு வரவேற்ற மோகன்லால் - நெகிழ்ச்சி நிகழ்வு !