India

"ஏன் 'சிக்கன் கபாப்'-ல காரம் போடல.." ஆத்திரத்தில் மனைவியை குத்தி கொன்ற கணவன்.. பெங்களுருவில் நடந்த சோகம்!

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் பகுதியில் வசித்து வந்தவர் சுரேஷ் (வயது 48). இவர் தனது மனைவி ஷாலினியுடன் (வயது 42) தனியே வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் தனியார் தொழிசாலை ஒன்றில் வேலை பார்த்து வருகின்றனர். மது போதைக்கு அடிமையான சுரேஷ், வீட்டிற்கு அடிக்கடி மது அருந்தி விட்டு வருவது வழக்கம். இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு நடக்கும்.

இந்த நிலையில், சம்பவத்தன்று வழக்கம்போல் சுரேஷ் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தனது மனைவி ஷாலினியிடம் 'சிக்கன் கபாப்' செய்து தருமாறு கேட்டுள்ளார். மனைவியும் மறுபேச்சு பேசாமல், செய்துகொடுத்திருக்கிறார். அதை வாங்கி சாப்பிட்ட கணவன், 'சிக்கன் கபாப்'-ல் காரம் குறைவாக இருப்பதாக சண்டையிட்டுள்ளார்.

கணவன் சண்டையிட்டதால், மனைவியும் பதிலுக்கு சண்டையிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ், ஷாலினியை அருகில் இருந்த உருட்டு கட்டையால் தாக்கியுள்ளார். அப்போதும் கோபம் தீராத சுரேஷ் சமையல் அறையில் இருந்த கத்தியை கொண்டு ஷாலினியை குத்தியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த ஷாலினி இரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். ஷாலினியின் அலறல் சத்தத்தை கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து காவல்துறைக்கு தகவலும் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் சுரேஷை தேடி வந்தனர்.

இதனிடையே தனது மனைவியை தானே கொன்றுவிட்ட குற்ற உணர்ச்சியில், காவல்துறையில் மாட்டி விடக்கூடாது என்பதால் சுரேஷ் ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் அவர் தூக்குபோட்டுக்கொண்ட தகவல் கிடைத்ததையடுத்து, சுரேஷின் உடலை மீட்ட காவல்துறையினர், உடற்கூறாய்வுக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிக்கன் கபாப்-ல் காரம் இல்லை என்பதால் ஆத்திரப்பட்ட கணவன் மனைவியை குத்தி கொன்று, தானும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: குறைதீர்வு கூட்டம்: தரையில் அமர்ந்து விவசாயியின் கோரிக்கையை கேட்ட கலெக்டர்.. -திருப்பத்தூரில் நெகிழ்ச்சி!