India

மயக்க மருந்து கொடுத்து ஆசிரியைக்கு பாலியல் வன்கொடுமை.. வீடியோ எடுத்து மிரட்டி வந்த பள்ளி இயக்குநர் கைது !

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பல மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில், 22 வயதுடைய இளம்பெண் ஒருவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் காணாமல் போயுள்ளார்.

இதனால் அவரது பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அந்த இளம்பெண்ணை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரிடமும் நடத்திய விசாரணையில், பள்ளியின் இயக்குநர் மேல் காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தி வந்த அதிகாரிகள், அவரின் மொபைல் போனை பரிசோதித்த போது, அந்த ஆசிரியருடன் நெருக்கமாக இருந்துள்ள வீடியோ இருந்துள்ளது. இதையடுத்து அவரிடம் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் அந்த வீடியோ குறித்த உண்மையை கூறினார்.

அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பு, தனது அறையில் வேலை இருப்பதாக பெண் ஆசிரியரை அழைத்த பள்ளி இயக்குநர், அவருக்கு குடிக்க மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்திருக்கிறார். அதை குடித்த பின் மயக்க நிலைக்கு சென்ற ஆசிரியையை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

மேலும் அதனை வீடியோவாகவும் பதிவு செய்திருக்கிறார். அதுமட்டுமின்றி, இந்த வீடியோவை காட்டி மிரட்டி அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த ஆசிரியை யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் ஆசிரியை காணாமல் போனதற்கும் பள்ளி இயக்குநருக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கிறதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு காணாமல் போன இளம்பெண்ணை தேட தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு தனியார் பள்ளியின் இளம்பெண் ஆசிரியையை அந்த பள்ளியின் இயக்குநரே பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாகவும் எடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: திருட்டு பைக்கில் ஆடு திருடிய கும்பல்.. விரட்டி பிடித்த பொதுமக்கள்.. நடந்தது என்ன ?