India

ரயில் நிலையத்தில் பெண் பத்திரிகையாளருக்கு பாலியல் தொல்லை.. ஸ்டேஷன் மாஸ்டர்களால் நடந்த கொடுமை !

கடந்த ஜூலை 25 ஆம் தேதி டெல்லியைச் சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் ஹரியானா மாநிலம் ரேவாரி ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருப்பு அறையில் காத்திருந்துள்ளார். அப்போது அங்கிருந்த கழிவறைக்கு சென்றபோது அது பூட்டப்பட்டிருந்தது.

இதன் காரணமாக ஸ்டேஷன் மாஸ்டர் அலுவலகத்திற்கு சென்று கழிவறையின் சாவியை கேட்டுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த ஸ்டேஷன் மாஸ்டர்கள் வினய் ஷர்மாவும், ராமவுத்தரும் பெண் பயணிகள் கழிவறையை அசுத்தமாக்குவதால் கழிவறை பூட்டப்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.

மேலும் அந்த பத்திரிகையாளரிடம் கழிவறை சாவியை கொடுக்க மறுத்த அவர்கள், அந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக ஆபாசமாக பேசி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் பத்திரிகையாளர் அங்கிருந்து சென்றுள்ளார்.

பின் ரேவாரி காவல்நிலையத்துக்கு சென்ற பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து போலிஸில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலிஸார், ஸ்டேஷன் மாஸ்டர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், பலரும் ஸ்டேஷன் மாஸ்டர்களை கைது செய்து கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

Also Read: ஆங்கிலேயரிடம் ஓய்வூதியம் பெற்றவர் தியாகியா? - புதுவையில் தீவைத்து எரிக்கப்பட்ட சாவர்க்கர் புகைப்படம் !