India

மாம்பழம் கேட்டு அழுத 5 வயது சிறுமி.. கழுத்தை அறுத்து கொலை செய்த சித்தப்பா.. உ.பி-யில் கொடூரம் !

உத்திர பிரதேச மாநிலத்தில் ஷாமிலி என்ற பகுதியை அடுத்துள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் உமர் தீன். இவர் கூலி தொழில் செய்யும் தனது அண்ணன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அண்ணனுக்கு கைரு நிஷா என்ற 5 வயதில் குழந்தை ஒன்று உள்ளது. உமர் இருக்கும் தைரியத்தில், சிறுமியை வீட்டில் விட்டுவிட்டு அண்ணனும், அண்ணியும் வேலைக்கு செல்வர்.

அந்த வகையில் சம்பவத்தன்று வழக்கம்போல் சிறுமி நிஷாவை, அவரது சித்தப்பா உமரிடம் விட்டு, அவர்கள் இருவரும் வேளைக்கு சென்றுவிட்டனர். அப்போது வீட்டில் இருந்த மாம்பழத்தை உமர் எடுத்து சாப்பிட்டு கொண்டிருந்தார். சித்தப்பாவை பார்த்த சிறுமி, தனக்கும் மாம்பழம் வேண்டுமென்று கேட்டுள்ளார். அதற்கு உமர் மறுப்பு தெரிவித்ததால், மாம்பழம் வேண்டும் என்று அடம்பிடித்துள்ளார் சிறுமி.

சிறுமி அடம்பிடித்ததால், ஆத்திரமடைந்த சித்தப்பா, சிறுமியை அருகில் இருந்த ஒரு கம்பை கொண்டு சரமாரியாக அடித்துள்ளார். இதில் தலையில் ஏற்பட்ட காயத்தால், சிறுமி மயங்கியுள்ளார். இருப்பினும் ஆத்திரமடங்காத சித்தப்பா கத்தியை எடுத்து சிறுமியின் கழுத்தை அறுத்துள்ளார்.

வீடு முழுக்க இரத்தமாக கிடக்க, சிறுமியை ஒரு சாக்குப்பையில் கட்டி வேறு ஒரு இடத்தில் தூக்கி வீசியுள்ளார். மேலும் சம்பவம் எதுவும் நடக்காதவாறு நடந்துகொண்டுள்ளார்.

அன்று மாலை வீடு திரும்பிய பெற்றோர்கள் சிறுமியை குறித்து உமரிடம் கேட்டபோது தனக்கு தெரியாது என்று உமர் மறுத்துள்ளார். இதையடுத்து பெற்றோர்கள், உறவினர்கள் என்று அனைவரும் சிறுமியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. எனவே காவல்துறையில் புகாரளித்தனர்.

இதையடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்த காவல் அதிகாரிகள், சித்தப்பாவிடமும் விசாரித்தனர். அப்போது அவரது பதில் சந்தேகத்திற்கு உரிய வகையில் இருந்ததால், அவரிடம் மீண்டும் மீண்டும் விசாரணை நடத்தினர். பின்னர், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார் உமர். இதைத்தொடர்ந்து அவர் சிறுமியை கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதங்களை காவல்துறையிடம் ஒப்படைத்தார்.

மேலும் சிறுமியின் சடலத்தை தூக்கி வீசிய இடத்தையும் காட்டியுள்ளார். இதனைத்தொடர்ந்து சிறுமியின் சடலத்தை கைப்பற்றிய அதிகாரிகள், உடற்கூறாய்வுக்கு அனுப்பியுள்ளனர். அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் இந்த கொலை மாம்பழத்திற்காக தான் நடந்ததா அல்லது வேறேதும் காரணம் உள்ளதா என்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: உ.பி.-யில் தாயை கடித்து கொன்ற பிட்புல் நாய்.. தத்தெடுக்க போட்டி போடும் ஆர்வலர்கள் !