India

மீண்டும் டெல்லியில் ஒரு கூட்டுப் பாலியல் சம்பவம் : ரயில் நிலையத்தில் நடந்த மோசமான சம்பவம்.. 4 பேர் கைது!

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கணவனைப் பரிந்து வேலை தேடி வந்துள்ளார். இவரது நண்பர் ஒருவர் மூலம் ரயில்வே துறையில் ஊழியராக சதீஷ்குமார் என்பவரது அறிமுகம் கிடைத்துள்ளது.

இதையடுத்து, அப்பெண்ணிடம் சதீஷ் ரயில்வேயில் வேலையில் வேலை வாங்கி தருவதாக உறுதியளித்துள்ளார். இதனால் இவரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளனர். இந்நிலையில் தனது புதிய வீட்டில் மகனின் பிறந்த நாள் விழா கொண்டாட உள்ளதாகவும் அதற்கு நீங்கள் வரவேண்டும் என அந்த பெண்ணிடம் சதீஷ் கூறியுள்ளார்.

இதை நம்பிய அந்தப் பெண் டெல்லி வந்துள்ளார். பின்னர் அந்த பெண்ணை கீர்த்தி நகர் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து புது டெல்லி ரயில் நிலையத்திற்கு சதீஷ் அழைத்து வந்துள்ளார். அப்போது சதீஷ் மற்றும் அங்கிருந்த மூன்று பேர் அந்த பெண்ணை கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பிறகு மயங்கிய அந்த பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு சென்றுள்ளனர்.

பின்னர் மயக்கம் தெளிந்த அப்பெண் நடந்தவற்றை ரயில் நிலையத்திலிருந்த போலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் அந்த பெண்ணை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பிறகு இது குறித்து விசாரணை செய்தபோது அதே ரயில்நிலையத்தில் ஊழியராக இருக்கும் சதீஷ்குமார், வினோத் குமார், மங்கள் சந்த், ஜகதீஸ் சந்த் ஆகிய நான்குபேர்தான் அப்பெண்ணை கூட்டாக வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து போலிஸார் நான்குபேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லி ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: "விவசாயம் செய்ய தெரியாது" என்று சொன்ன கர்ப்பிணி மருமகள்.. ஆத்திரத்தில் மாமியார் செய்த கொடூரம் !