India

குடும்ப தகராறு : அம்மா அப்பா சண்டையில் பரிதாபமாக பலியான மகள் - டெல்லியில் நடந்த சோகம் !

டெல்லியில் இருக்கும் கரவால் என்ற நகரில் வசிப்பவர் பீம்சென் (45). இவருக்கு ஒரு மனைவியும் 3 மகள்களும் இருக்கும் நிலையில், வேலைக்கு செல்லாமல் குடிபோதைக்கு அடிமையாகியுள்ளார். தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த மனைவியுடன் சண்டை போடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

சம்பவத்தன்று வழக்கம்போல் குடித்து விட்டு, தனது மனைவியுடன் சண்டையிட்டுள்ளார். மேலும் அவரை ஜன்னலின் கண்ணாடியை கொண்டு அவரை தாக்கியுள்ளார். அப்போது தந்தையை தடுக்க சென்ற மகள்களையும் சரமாரியாக அடித்து கீழே தள்ளியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஒரு மகள், சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்தார். பின்னர் பீம்சென் வீட்டிலிருந்து வெளியே சென்றுவிட்டார்.

அப்போது எதேர்ச்சியாக வீட்டிற்கு வந்த பீம்சென்னின் தம்பி, அவர்களை பார்த்து அதிர்ச்சியடைந்ததுடன் அனைவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார். மேலும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

தகவலின் அடிப்படையில் மருத்துவமனைக்கு வந்து விசாரணை மேற்கொண்ட காவல் அதிகாரிகள், பீம்சென்னின் தம்பியிடம் நடந்தவற்றை கேட்டறிந்தனர். இதனிடையே மயக்கமடைந்த 18 வயதுடைய மகளுக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து வன்முறை வழக்காக இருந்த இதை, கொலை வழக்காக மாற்றி பீம்சென்னை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் ஆரம்பத்தில் குடும்பத்திற்காக ஆட்டோ ரிக்ஷா ஓட்டி வந்த பீம்சென், அவரது மனைவியுடன் காய்கறி வியாபாரமும் செய்து வந்துள்ளார். அந்த சமயத்தில் அவரது மூத்த மகளுக்கு வங்கியில் வேலை கிடைத்ததால், அவர் தனது வேலையை விட்டு, மது போதைக்கு அடிமையாகியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

தாயை தாக்கிய தந்தையை தடுத்து நிறுத்தும்போது ஏற்பட்ட மோதலில் 18 வயதுடைய மகள் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: "விவசாயம் செய்ய தெரியாது" என்று சொன்ன கர்ப்பிணி மருமகள்.. ஆத்திரத்தில் மாமியார் செய்த கொடூரம் !