India

கணவனை கொன்று கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்துவிட்டு தலைமறைவான மனைவி : மகாராஷ்டிராவில் பரபரப்பு !

மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகேயுள்ள சாக்கி நாக்காபகுதியில் வசித்து வருபவர் நசீம் கான் (வயது 22). இவருக்கும் ரூபினா என்ற பெண்ணுக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இவரும், இவரது தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு நசீம் கானின் தந்தை, நசீமை காண வந்துள்ளார். அப்போது அவரது வீடு பூட்டப்பட்டிருந்ததால், பக்கத்து வீட்டில் மகன் மருமகள் குறித்து விசாரித்துள்ளார். ஆனால் அவர்களுக்கு எந்த விவரமும் தெரியவில்லை என்பதால், மீண்டும் தனது வீட்டிற்கே சென்றுள்ளார் நசீமின் தந்தை.

அவர் சென்ற சில நாட்களுக்கு பிறகு, நசீம் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அவரது பக்கத்துக்கு வீட்டுக்காரர்கள் காவல்துறையில் தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து வீட்டின் கதவை உடைத்து சோதனை செய்ததில், நசீம் இறந்து இரத்தக்கரையோடு அழுகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.

இதையடுத்து நசீமின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே அவரது மனைவி ரூபினாவை தொடர்புக்கொள்ள முயற்சித்தனர். ஆனால் அவை தோல்வியில் முடிந்ததால், ரூபினாவின் மொபைல் எண்ணின் கடைசி இருப்பிடத்தை தெரிந்துகொண்டு அங்கே சென்று ரூபியாவையும், அவருடன் இருந் மற்றொரு நபரையும் காவல்துறையில் வைத்து விசாரித்தனர்.

இது குறித்து காவல்துறையினர் கூறியதாவது, கணவன் மனைவிக்குள் வரும் வழக்கமான சண்டை இவர்களுக்குள்ளும் வந்தது. சம்பவம் நடந்த நாளான 14-ம் தேதியும் வழக்கம் போல் சண்டை வந்துள்ளது. இரவு தொடங்கிய இந்த சண்டை மறுநாள் காலை வரை தொடர்ந்துள்ளது. எனவே நசீமை சமாதானப்படுத்துவதற்காக, ரூபினா அவரது ஆண் நண்பரான சைஃப் பரூக் (21) என்பவரை அழைத்துள்ளார்.

நசீமை, சைஃப் பரூக், சமாதானபடுத்த முயற்சித்த போது சண்டை வீரியமானதால் கோபமடைந்த சைஃப் பரூக், நசீமின் தலையில் அருகிலிருந்த உண்டியலை கொண்டு தாக்கியுள்ளார். இதில் மயக்கமடைந்த நசீமை விடாமல் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் சைஃப் பரூக்.

இதையடுத்து நசீமின் உடலை, அங்கிருந்த படுக்கை அறையிலுள்ள கட்டிலின் கீழ் பதுக்கி வைத்து விட்டு இருவரும் தலைமறைவாகியுள்ளதாக கூறினர். மேலும் இருவரையும் கைதுசெய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவனை கொலை செய்து விட்டு மனைவி தலைமறைவாகியிருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: மெட்ரோவில் நஸ்ரியா பாட்டுக்கு குத்தாட்டம்.. வைரலான வீடியோவால் வசமாக போலிஸிடம் சிக்கிய இளம்பெண் !