India

"ஒரு நிகழ்வு தான் என்னை மாற்றியது".. ரூ.600 கோடி சொத்தை அரசுக்கு தானமாக கொடுத்த மருத்துவர்..

உத்தர பிரதேசம் மாநிலம், மொராதாபாத் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் குமார் கோயல். மருத்துவராக பணியாற்றி வரும் இவர், தனது மனைவி ரேணு, இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் ஆகியோருடன் வசித்து வருகிறார். இவர் ஒரு மருத்துவராக மட்டுமல்லாமல் சமூக ஆர்வலராகவும் இருந்து வருகிறார்.

மேலும் ஏழை எளியவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் சிறப்பான வைத்தியம் பார்த்து வருகிறார். முன்னாள் குடியரசு தலைவர்களான டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம், பிரதீபா தேவி பாட்டீல், பிரணாப் முகர்ஜி மற்றும் இந்நாள் குடியரசு தலைவரான ராம்நாத் கோவிந்த் ஆகியோர் கைகளில் 4 முறை விருது வாங்கினார்.

இந்த நிலையில், மருத்துவர் அரவிந்த் கோயல் தற்போது தனது சொத்து முழுவதையும், ஏழைகளுக்கு உதவுவதற்காக உத்திரபிரதேச மாநில அரசுக்கு தானமாக வழங்கியுள்ளார். அவரின் மொத்த சொத்து மதிப்பு 600 கோடி ரூபாய் ஆகும்.

இதனிடையே இந்தியாவில் பிரகடனப்படுத்திய ஊரடங்கு சமயத்தில், மொராதாபாத்திலுள்ள 50 கிராமங்களை தத்தெடுத்து, அங்குள்ள மக்களுக்கு தேவையான வசதிகளை இலவசமாக வழங்கியுள்ளார் அரவிந்த் குமார் கோயல்.

இது நெகிழ்ச்சி சம்பவம் குறித்து அரவிந்த் கோயல் செய்தியாளர்களிடம் கூறுகையில், " இந்த முடிவை நான் 25 ஆண்டுகளுக்கு முன்பே எடுத்து விட்டேன்.

25 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு சேம்பர் டிசம்பர் மாதம், நான் ஒரு இரயிலில் ஏறியவுடன், ஒரு ஏழைக் குளிரால் நடுங்குவதைக் கண்டேன். அவர் காலில் செருப்புகூட இல்லை. அவரை பார்த்ததும் எனக்கு ஒரு மாதிரி இருந்தது. உடனே எனது காலணிகளை கழட்டி அவருக்கு கொடுத்தேன். கொடுத்த பிறகு சிறிது நேரத்திலே எனது உடல்நிலை மோசமானது.

அப்போது தான் நான் உணர்ந்தேன், இந்த நபர் போல் இன்னும் எத்தனை பேர் இது போன்று குளிரில் நடுங்குவர் என்று. அன்றிலிருந்து தான் நான் ஏழைகளுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் உதவ ஆரம்பித்தேன். வாழ்க்கையில் என்ன நடக்கும் என்று நாம் யாருக்கும் தெரியாது. எனவே எனது சொத்துக்களை உயிருடன் இருக்கும் போதே, ஏழைகளுக்கு உதவும் வகையில் தானமாக வழங்கியுள்ளேன்" என்று தெரிவித்தார்.

இவரின் இந்த செயல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதோடு அனைவரும் இவரை பாராட்டி வருகின்றனர்.

Also Read: பெண்ணுக்கு I Like You என்று செய்தி அனுப்பிய நபர்! போட்டு வெளுத்த கணவர் -ட்விட்டர் மூலம் புகார் !