India

33 வயதில் சொந்தமாக 10 ஜெட் விமானங்கள்.. 5,600 ரூபாயில் தொழில் தொடங்கி இளம் தொழிலதிபராக உயர்ந்து சாதனை !

பரம்பரை பணக்காரர்கள் மட்டுமே வியாபாரத்தில் உச்சம் தொடமுடியும் என்ற நிலை தற்போது இருந்தாலும் சிலர் தங்கள் திறமை மற்றும் விடாமுயற்சி காரணமாக சாமானியர் கூட உச்சம் தொட முடியும் என்பதை நிரூபித்து வருகிறார்கள். அவரிகளில் ஒருவர்தான் கனிகா தேக்ரிவால்.

பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டப் படிப்பும், முதுகலை வணிக மேலாண்மை படிப்பையும் நிறைவு செய்த இவர், தனது 22 வயதில் ஏவியேஷன் துறையில் ஜெட் செட் கோ (Jet Set Go) என்ற பெயரில் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். அப்போது அவரிடமிருந்த கையிருப்பு வெறும், 5,600 ரூபாய்தான். பெட்டி கடை கூட வைக்கமுடியாத தொகையில்தான் அவர் சிக்கலான ஏவியேஷன் துறையில் கால் பதித்தார்.

இவரின் நிறுவனம் இந்தியாவிலுள்ள பல பிரைவேட் ஜெட்டுகள், சார்டர்ட் பிளேன்கள், ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி ஒரு விமான டாக்ஸி அக்ரிகேட்டார் போல செயப்பட்டது. அதாவது சொந்த ஆட்டோ அல்லது கார் இல்லாமல் வாடகை கார்களை பயன்படுத்தி ஓலா, உபர் போன்ற நிறுவனங்கள் செயல்படுவதைபோலத்தான் இவரது நிறுவனமும் செயல்படுகிறது.

இவர் இந்த தொழிலில் இறங்கியபோது இவர் சிந்தித்த அளவு யாரும் சிந்திக்கவில்லை. அதாவது மிகப் பெரிய பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்தக் கூடியதாக இருந்த தொழிலை நடுத்தர மக்கள் பயன்படுத்தும் விதமாக மாற்றிக்காட்டினார்.

பிற நிறுவனங்கள் அதிக கமிஷன், நேரம் தவறல் போன்றவற்றில் மாட்டி திணறிக்கொண்டிருந்த நிலையில், முறையான கமிஷன், சரியான திட்டமிடல் போன்றவற்றால் வாடிக்கையாளர்களை ஈர்த்தார். இதனால் இவரது நிறுவனம் விரைவில் அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. மிகப்பெரும் பணக்காரர்கள் முதல், நடுத்தர மக்கள் வரை இவரது நிறுவனத்தில் முன்பதிவு செய்து தனியார் விமான சேவையை பெறுகிறார்கள்.

இந்த நிறுவனம் தொடங்கி 10 ஆண்டுகள் ஆன நிலையில் கனிகா தேக்ரிவாலிடம் 10 ஜெட் விமானங்கள் சொந்தமாக இருக்கிறது. அந்த அளவு குறுகிய காலத்தில் தனது தொழிலில் உச்சம் தொட்டுள்ளார். இத்தனைக்கும் இவர் இந்த நிறுவனத்தை தொடங்கிய புதிதில், இவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சுமார் ஓராண்டுகள் புற்றுநோய்க்காக சிகிச்சை எடுத்துக்கொண்ட இவர், பின் அதிலிருந்து மீண்டு இந்த சரித்திர சாதனையை படைத்துள்ளார். தற்போது கூட இந்த துறையில் புதிய கருவிகளை அறிமுகப்படுத்தும் ஆராய்ச்சியில் இவரது நிறுவனம் இறங்கியுள்ளது. நாங்கள் விமான பயணத்தை ஜனநாயகப்படுத்த அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம் என்று கூறியதில் இருந்தே இவரின் வெற்றி சரித்திரத்தை நாம் அறியலாம்.

Also Read: தொடரும் இனப்பாகுபாடு.. வகுப்பறையில் வைத்து தீ வைத்து கொளுத்தப்பட்ட பழங்குடி மாணவர்.. நடந்தது என்ன?