India

“மக்கள் தொகையை கட்டுப்படுத்த இதுவா வழி ?” - பாஜக அமைச்சரின் பதிவால் எழுந்த சர்ச்சை !

உலக மக்கள்தொகை தினம் ஜூலை 11ஆம் தேதியான நேற்று அனுசரிக்கப்பட்டது. இதற்கு பலரும் தங்களது பதிவுகள் மூலம் விழிப்புணர்வும், கருத்துக்களும் பதிவிட்டு வந்தனர். மேலும் வரும் 2023 ஆம் ஆண்டு மக்கள் தொகையில் இந்தியா சீனாவை மிஞ்சிவிடும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐ.நா. சார்பில் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நாகலாந்து மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க கல்வி அமைச்சர் தெம்ஜென் இம்னா அலாங் என்பவர், மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த இதை செய்யுங்கள் என்று, தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக ஆலோசனை ஒன்றை வழங்கியுள்ளார். இவரது ட்விட்டர் பதிவு தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.

அதில், "இன்று உலக மக்கள்தொகை தினத்தையொட்டி, மக்கள் தொகைப் பெருக்கம் மற்றும் குழந்தைப்பேறு போன்ற பிரச்னைகளில் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். அல்லது அனைவரும் என்னைப்போல சிங்கிளாக இருந்து சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முயற்சி செய்யுங்கள். இன்றே 'சிங்கிள் இயக்கத்தில்' இணைய வாருங்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இவரது பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ என்பவரும், இவரது பதிவிற்கு மறுபதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "கல்வி அமைச்சர் திருமணத்திற்கு எதிரானவர் இல்லை. தனது சிங்கிள் கேங்கிற்கு ஆள் சேர்க்கிறார்" என்று கிண்டலடித்துள்ளார்.

ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ்., அமைப்புகள், பாஜகவை சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலரும், காதல் திருமணம், குடும்பம் போன்ற இல்லறவாழ்வு தொடர்புடைய நிகழ்வுகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், ஒரு பா.ஜ.க கல்வி அமைச்சரின் இந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ‘அவன் இவன்’ திரைப்பட துணை நடிகர் திடீர் மரணம்.. சோகத்தில் மூழ்கிய திரையுலகம் !