India

“மோடி ஆடைக்கு மட்டும் செலவு செய்த தொகை எவ்வளவு ?” - பா.ஜ.க-வினருக்கு பதிலடி கொடுத்த தெலுங்கானா முதல்வர் !

இந்தியாவில் மீண்டும் ஆட்சிக்கு வந்த ஒன்றிய பா.ஜ.க அரசு, தங்கள் கட்சி ஆட்சி செய்யாத மாநிலங்களுக்கு பல்வேறு இடையூறுகளை கொடுப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறது. அந்தவகையில் தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ்வோடு, பா.ஜ.கவினர் கடுமையாக மோதி வருகிறார்.

சமீபத்தில் ஹைதராபாத் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட பிரதமர் மோடி கலந்துக்கொண்டு பேசினார். அப்போது சந்திரசேகரராவைக் குறிவைத்துத் தாக்கினர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், சந்திரசேகரராவும், கறுப்புப் பணம் மீட்பதாக சொன்ன வாக்குறுதி என்ன ஆனது? வங்கிக் கணக்குகளில் போடுவதாக கூறிய ரூ. 15 லட்சம், ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு உள்ளிட்ட வாக்குறுதிகள் எங்கே என மோடிக்கு கேள்வி எழுப்பினார்.

இதனை சமாளிக்க முடியாத பா.ஜ.க-வினர் அம்மாநில அரசுக்கு எதிராக தகவல் திரட்டும் நோக்கில், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் சந்திரசேகரராவின் ஊதியம், செலவினம், பயணங்களுக்கு ஆன செலவு உள்ளிட்ட தகவல்களைக் கேட்டு நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்களை தெலுங்கானா பாஜக-வினர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அனுப்பினர்.

இதன்மூலம் சந்திரசேகர ராவ் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் முயற்சியில் இறங்கினர். இதையடுத்து, பா.ஜ.க எடுத்த அஸ்திரத்தை, அதற்கு எதிராகவே திருப்பி தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி பதிலடி கொடுத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுச் சுற்றுலாவுக்கு ஆன செலவுகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு அளிக்க தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி முடிவு செய்துள்ளது.

பிரதமர் மோடியின் அலுவலகம் மற்றும் மத்திய நிதியமைச்சகம், உள்துறை அமைச்சகம், வெளிவிவகாரத்துறை மற்றும் இதர முக்கியமான ஒன்றிய அமைச்சகங்களிடமும் இதுதொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு ஆன செலவுத்தொகை மட்டுமல்லாமல், அவரது ஆடைகளுக்கு செலவிடப்பட்ட தொகை குறித்தும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

Also Read: சொந்த கிராமத்திற்கு மின்சாரம் கொடுக்காதவர் பழங்குடியினருக்கு என்ன செய்வார்? சந்திரசேகர ராவ் விமர்சனம்!