India

அமர்நாத் யாத்திரையில் பக்தர்கள் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு.. 40 பேர் மாயம்..

ஜம்மு காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகையில் உள்ள சிவன் கோவிலுள்ள பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம். இந்த பனிக்குகையை நோக்கிய பயணம் 43 நாட்கள் வரை இருக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளாக நாடு முழுவதும் பரவிய கொரோனா தொற்று காரணமாக யாத்திரைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிலையில் இந்தாண்டு யாத்திரைக்கு சுமார் 3 லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் பதிவு செய்துள்ளனர். இதற்கான யாத்திரை பயணம் கடந்த ஜூன் 30 ஆம் தேதி தொடங்கி வரும் 11-ம் தேதி முடிவடைகிறது. இதனால் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அமர்நாத்துக்கு வந்து பனிலிங்கத்தை தரிசனம் செய்கிறார்கள்.

கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அந்த பகுதியில் வானிலை மோசமாக இருந்ததால், யாத்திரை தாற்காலிகமாக நிறுத்து வைக்கப்பட்டது. பின்னர், அது சரியானவுடன் யாத்திரை மீண்டும் தொடங்கியது.

இந்த நிலையில், நேற்று மீண்டும் பக்தர்கள் கோயிலை நோக்கி சென்று கொண்டிருக்கையில், குகை அருகே உள்ள கந்தர்பால் பகுதியில் திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டு அதி கனமழை பெய்தது. (பொதுவாக அந்த பகுதியில் குறிப்பிட்ட இடங்களில் குறுகிய நேரத்தில் மிக கனமழை பெய்வது 'மேக வெடிப்பு' என்று கூறப்படுகிறது).

இதனால் அங்கு போடப்பட்டிருந்த பல முகாம்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவிலும் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 15 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 40 பேர் காணாமல் போனதாக கூறப்படும் நிலையில், தேசிய பேரிடர் மீட்பு படையினர் அவர்களை தேடும் பணியில் நேற்று இரவு முதல் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து, காயமடைந்தவர்கள் வான்வழியாக மீட்கப்பட்டு சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தால் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: "என் அம்மாவோட கடைசி ஆசை.." தாயின் உடலை தானமாக வழங்கிய மகள்கள்.. சென்னையில் நெகிழ்ச்சி சம்பவம் !