India

’திருநம்பி’ என்பதால் ஆடம் ஹாரிக்கு விமானத்தை இயக்க தடை.! - DGCA கூறிய காரணம் என்ன ?

ஆடம் ஹாரி என்ற திருநம்பி, கடந்த 2019 ஆம் ஆண்டு 'இந்தியாவின் முதல் திருநம்பி விமானி'யானார். அடிப்படையில் கேரளாவை சேர்ந்த இவர், ஒரு வணிக விமானியாக வேண்டும் என்று ஆசைப்பட்டதால், இவரது கனவை நிறைவேற்றும் வகையில் கேரள அரசு இவருக்கு உதவி செய்தது. ஆனால், சில ஹார்மோன் சிகிச்சை காரணமாக DGCA என்று சொல்லப்படும் விமானப் போக்குவரத்து இயக்குநரகம், விமானியாக ஆவதற்கு இவர் தகுதியற்றவர் என அறிவித்துள்ளது.

பொதுவாக ஒரு விமானியாக வேண்டுமென்றால், அதற்காக அந்த நபர் பல சோதனை கட்டங்களை கடக்க வேண்டியிருக்கும். அவ்வாறு திருநங்கை ஆடம் ஹாரிக்கும் பலகட்ட சோதனைகள் நடைபெற்றது. அதில் மருத்துவ பரிசோதனையும் அடங்கும். அந்த பரிசோதனையில் ஆடம் ஹாரிக்கு Gender Dysphoria என்று சொல்லப்படும் பாலின வலியுணர்வு இருப்பதாக கூறி, இவர் விமானியாக தகுதியற்றவர் என்று அறிவித்துள்ளது.

United Kingdom-ன் தேசிய சுகாதார சேவைகள் (NHS) படி, Gender Dysphoria என்பது ஒரு நபர் தனது உயிரியல் (பெண்/ஆண்) பாலினம் மற்றும் பாலின அடையாளத்திற்கு இடையிலான பொருந்தாததன் விளைவாக உணரும் அமைதியின்மையாகும். இந்த மாதிரியான உணர்வு மனச்சோர்வு மற்றும் பதட்டத்தை ஏற்படுத்தும். இது அந்த நபரின் வாழ்க்கையை மேலும் சீர்குலைக்கும் மற்றும் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். கிட்ட தட்ட இது மன நோயாக கருதப்படுகிறது.

ஆடம் ஹாரிக்கு இந்த Gender Dysphoria இருப்பதோடு, தனது பெண் பாலினத்திலிருந்து மாறுவதற்கு 'செக்ஸ் ஹார்மோன் தெரபி' மருந்துகளை எடுத்து வருகிறார். DGCA-ன் படி, இவர் இந்த சிகிச்சையில் இருக்கும் வரை ஒரு விமானி ஆவதற்கு தகுதி பெற முடியாது. சிகிச்சை முடிந்தவுடன் மீண்டும் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

ஆனால் உண்மை என்னவென்றால், தன் பாலினத்தில் இருந்து பிற பாலின் மாற்றத்திற்காக அவர்கள் (திருநம்பி/திருநங்கைகள்) தங்கள் வாழ்நாள் முழுவதும் இந்த சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Gender Dysphoria

தற்போது உணவு டெலிவரி செய்யும் ஒரு நபராக இருக்கும் ஆடம் ஹாரி, DGCA-வின் நிராகரிப்புக்கு எதிராக கேரளா உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுக்க இருக்கிறார். இதனை தனது அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரே தெரிவித்துள்ளார். பாலின வேற்றுமை காரணமாகவே DGCA திருநம்பியாக ஆடம் ஹாரியை நிராகரித்துள்ளதாக பலரும் தங்களது எதிர்ப்புகளை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: ஒரே ஆண்டில் செய்து காட்டிய தி.மு.க அரசு.. புதிய 20 கல்லூரிகளை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!