India

“நிலச்சரிவில் சிக்கிய 80 பேரும் பலியாகியிருக்கலாம்”: மணிப்பூர் முதலமைச்சரின் கருத்தால் பெரும் பரபரப்பு !

மணிப்பூர் மாநிலத்தில் உள்ள நோனி மாவட்டத்தில் ரயில்வே கட்டுமான பணிகள் நடந்து வந்தது. இதற்காக இந்த பகுதியில் ஏராளமான வீரர்கள் கட்டுமான பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த பகுதியில் தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்புக்கு ராணுவ வீரர்களும் அங்கு இருந்தனர். இந்த நிலையில் இங்கு கடந்த புதன்கிழமை இரவு பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் இங்கு வேலை இருந்த ஏராளமான தொழிலாளர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் சிக்கினர். இந்த தகவல் இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மண்ணில் புதைந்து போனவர்களை தேடும் பணியில் ஒன்றிய, மாநில அரசுகள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தன. இதுவரை ராணுவ 18 வீரர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் என 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் 50க்கும் மேற்பட்டோரை காணவில்லை.

இந்த நிலையில் மீட்பு பணி நடைபெறும் இடத்துக்கு வந்த மாநில முதல்வர் பைரன் சிங் மீட்பு பணிகளை பார்வையிட்டார். அப்போது பேசிய அவர், "நிலச்சரிவு ஏற்பட்டு 4 நாட்களாகி விட்டதால், மண்ணில் புதைந்த யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்பது வேதனை அளிக்கிறது. 80க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம்" என கூறியுள்ளார்.

இந்த தகவல் அந்த பகுதியில் மண்ணில் புதைந்திருந்தவர்களின் உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எனினும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறும் என மீட்புப்படை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Also Read: "சென்று எங்கள் பழைய RECORD-ஐ எடுத்து பாருங்கள்" -இந்திய அணிக்கு இங்கிலாந்து பயிற்சியாளர் எச்சரிக்கை!