India

MP-க்களின் இரயில் பயண செலவு மட்டுமே ரூ.62 கோடியா ! - ஒன்றிய அரசு தகவல்..

பொதுவாக இந்தியாவில் அரசியல் பதவிகளில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு அரசு சார்பில் சலுகைகள் உண்டு. அதில் வாகனப்போக்குவரத்து, தங்கும் இடம் என்று பல அடங்கும். அதன்படி இரயில்வேவில் பயணம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.) இரயிலில் உள்ள முதல் நிலை ஏ.சி. வகுப்பில் இலவசமாக பயணம் செய்யலாம். இதில் அவர்கள் மட்டுமின்றி அவரது மனைவியும் சில நிபந்தனைகளோடு பயன் பெறலாம்.

இதைப்போல் முன்னாள் எம்.பி.க்கள் இரண்டாம் நிலை ஏ.சி. வகுப்பில் இலவசமாக பயணம் செய்யலாம். இதற்கான கணக்கை இரயில்வேத்துறை மக்களவை செயலகத்துக்கு அனுப்பி வைத்து, இலவசப்பயணத்தின் செலவு ஒன்றிய அரசு வழங்கி வருகிறது.

இந்த நிலையில் கடந்த 5 ஆண்டு காலத்தில் இந்தியாவிலுள்ள முன்னாள் மற்றும் தற்போதைய எம்.பி.க்கள் மேற்கொண்ட பயண விவரம், அதற்கான செலவு குறித்து கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மக்களவை செயலகத்துக்கு மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர் கவுர் கடிதம் அனுப்பினார்.

இதற்கு பதிலளித்துள்ள மக்களவை செயலகம், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் எம்.பி.க்களின் இரயில் பயண செலவு ரூ.62 கோடி என தெரிவித்துள்ளது. அதில் முன்னாள் எம்.பி.க்கள் ரூ.26.92 கோடி எனவும், தற்போதைய எம்.பி.க்களின் பயண செலவு ரூ.35.21 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கொரோனா காலத்தில் (2020-2021) மட்டும் மேற்கொண்ட பயண செலவு மட்டும் ரூ.1.29 கோடி என்று விளக்கமளித்துள்ளது.

Also Read: புதையலில் பழங்காலத்து நகைகள்.. ஓட்டல் உரிமையாளருக்கு விபூதி அடித்த வட மாநில தொழிலாளர்கள் !