India

வாடிக்கையாளர் கணக்கில் கடன் பெற்று ரூ.6 கோடி மோசடி-'DATING APP'காதலிக்காக வங்கியை ஏமாற்றிய கிளை மேலாளர்!

பெங்களூரில் உள்ள ஹனுமந்தநகர் இந்தியன் வங்கியில் மேலாளராக இருக்கும் ஹரிசங்கர் என்பவர் கடந்த 4 மாதங்களுக்கு முன் டேட்டிங் ஆப் ஒன்றில் தனது பெயரை பதிவு செய்துள்ளார். இதில் இவருடன் பெண் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். இதைத் தொடர்ந்து இருவரும் பேசி பழகி வந்துள்ளனர்.

அதன் பின்னர் அந்தப் பெண் ஹரிசங்கரிடம் முதலில் ரூ.12 லட்சம் பணம் கேட்டுள்ளார். அதை மறுக்காத ஹரிசங்கரும் பணம் கொடுத்துள்ளார். பின்னர் அந்த பெண் மேலும் பணம் கேட்டுள்ளார்.

ஆனால் ஹரிசங்கரிடம் அப்போது பணம் இல்லாததால் தனது வங்கி வாடிக்கையாளரான அனிதா என்பவரின் கணக்கில் இருந்து 6 கோடி ரூபாய்க்கு கடன் எடுத்து, அந்தப் பெண்ணிடம் கொடுத்துள்ளார்.

தன் பெயரில் கடன் எடுக்கப்பட்ட விவரம் அனிதாவுக்கு தெரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அனிதா வங்கியின் உயர் அதிகாரிகளிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார். அதன்பேரில், வங்கி அதிகாரிகள் நடத்திய விசாரணையில் வங்கி மேலாளர் ஹரிசங்கர் செய்த மோசடி வெளிவந்துள்ளது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அனிதாவின் கணக்கில் இருந்து ரூ. 5.70 கோடி அளவிற்குக் கடன் பெற்றிருப்பதும், அந்த பணம் பெங்களூருவில் உள்ள வங்கியிலிருந்து கர்நாடகத்தில் உள்ள இரண்டு வங்கிகளுக்கும், மேற்கு வங்காளத்திலுள்ள 28 வங்கிக் கணக்குகளுக்கும் மாற்றம் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து வங்கி அதிகாரிகள் சார்பில் போலிஸில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் வங்கி மேலாளர் ஹரிசங்கர் கைது செய்யப்பட்டார். இவரிடம் போலிஸார் நடத்திய விசாரணையில் இந்த சம்பவத்தில் பலருக்கு தொடர்பு இருக்கலாம் எனவும், இதில் ஒரு கும்பல் சம்மந்தப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்துள்ளது.

Also Read: அசாமில் ஒரு அண்ணாமாலை! கணுக்கால் அளவு நீரில் படகில் சென்ற பாஜக அமைச்சர் - கலாய்த்து தள்ளும் இணையவாசிகள்!