India

நிராசையான கனவு.. ஒன்றிய அரசின் அக்னிபாத் திட்டத்தால் 2 இளைஞர்கள் தற்கொலை!

ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து நாடுமுழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். பீகாரில் தொடங்கிய இந்த போராட்டம், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்கள் முழுவதும் தீவிரமடைந்துள்ளது.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் மீது போலிஸார் தடியடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இருப்பினும் இளைஞர்கள் தங்களின் போராட்டங்களைக் கைவிடாமல் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். குறிப்பாக ராணுவத்திற்குத் தயாராகி வரும் இளைஞர்களே இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அக்னிபாத் திட்டத்தில்,ஒரு இராணுவ வீரர் வெறும் 4 வருடங்கள் மட்டுமே இந்திய இராணுவ பணியில் இருக்க முடியும். மேலும் அவர்கள் ஒப்பந்த காலம் முடிந்த பின், இராணுவத்தில் வழங்கப்படும் எந்த ஒரு சலுகையும் அவர்களுக்கு வழங்கப்படாது. இதனாலேயே இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அக்னிபாத் திட்டத்தால், தனது கனவு நிராசையானதாகக் கூறி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தனஞ்சய் மொஹாந்தி. இளைஞரான இவர் நான்கு ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் சேர்வதற்காகத் தொடர் பயிற்சியில் ஈடுபட்டுவந்தார்.

இந்நிலையில் ஒன்றிய அரசு கொண்டு வந்த அக்னிபாத் திட்டத்தால் தனது ராணுவ கனவு நிராசையானதால் மனமுடைந்த தனஞ்சய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அதேபோல் ஹரியானாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இளைஞர்களை தற்கொலைக்கு வழிவகை செய்யும் விதமாக இந்த அக்னிபாத் திட்டம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Also Read: அக்னிபாத் திட்டத்தை இந்தியர்கள் எதிர்ப்பது ஏன் - ராணுவம் தனியாரிடம் சென்றால் ஏற்படும் பேரிழப்பு என்ன?