India

13 வழக்கு.. 24 ஆண்டுகளாக தலைமறைவு.. போலிஸிடம் சிக்காமல் தப்பிய குற்றவாளி பிடிபட்டது எப்படி ?

ஒடிசா மாநிலம், கஞ்சம் மாவட்டம், துளசிபூர் எனும் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் பிஸ்வால். இவர் மீது, கடந்த 1998ம் ஆண்டு 2 கொலைகள், 10 கொலை முயற்சிகள், ஒரு திருட்டு வழக்கு உட்பட 13 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

இந்த வழக்குகள் தொடர்பாக போலிசார் அவரை கைது செய்ய வரும்போதெல்லாம் அதிலிருந்து அவர் தொடர்ந்து தப்பித்து வந்துள்ளார். ஒரு முறையோ இரு முறையோ அல்ல, கடந்த 24 ஆண்டுகளாக இதேப்போன்று அவர் தப்பி வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சங்கர் பிஸ்வால் அவரது குடும்பத்தினரை சந்திக்க அவரது சொந்த ஊருக்கு வந்திருப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து அவரது கிராமத்துக்கு சென்ற போலிஸார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

இது தொடர்பாக பேசிய காவல்துறை கண்காணிப்பாளர் பிரிஜேஷ் ராய். ”குற்றவாளி சங்கர் பிஸ்வாலைப் பிடிக்கப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், ஒவ்வொருமுறையும் அவர் தப்பி விட்டார். அவரை பிடிக்க பல்வேறு மாநிலங்களுக்கும் குழுவை அனுப்பிய நிலையில் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் ” எனக் கூறியுள்ளார்.

24 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சங்கர் பிஸ்வாலுக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் இருப்பதாகவும், அவர் பல ஆண்டுகளாக சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, சூரத் ஆகிய நகரங்களில் கூலி வேலை செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.