India

“2 வயது கைக்குழந்தையை அடித்து துன்புறுத்திய பணிப்பெண்..” : நெஞ்சை பதற வைக்கும் CCTV காட்சி!

மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூரில் வசித்து வரும் தம்பதிக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கணவன், மனைவி இருவருமே வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தினால், குழந்தை பராமரிக்க கடந்த 4 நான்கு மாதங்களுக்கு முன்பு ரஜினி செளத்ரி என்ற பணிப்பெண்ணை நியமித்துள்ளனர். மாதம் 5 ஆயிரம் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்த ரஜினிக்கு, தங்கள் வீட்டிலேயே உணவும் வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில் தங்கள் மகனுக்கு திடீரென்று உடல்நிலை மோசமானதால், சிறுவனை மருத்துவரிடம் அழைத்து சென்றனர். அப்போது சிறுவனை பரிசோதித்த மருத்துவர், குடல் வீக்கம் இருப்பதாகவும், அவன் கடுமையாக தாக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் குழந்தைக்கு எவ்வாறு காயங்கள் ஏற்பட்டது என்பது குறித்து குழப்பமடைந்தனர்.

பின்னர், வீட்டில் குழந்தையை பார்த்துக்கொள்ள பணியமர்த்தப்பட்டுள்ள ராஜினி சவுதிரி இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என தம்பதியர் சந்தேகமடைந்தனர். இதனை தொடர்ந்து வீட்டில் உள்ள பணிப்பெண்ணின் நடவடிக்கைகளை கண்காணிக்க வீட்டில் உள்ள அறையில் ஒரு இரகசிய கேமராவை தம்பதி பொறுத்தியுள்ளனர். இதில் அதிர்ச்சியளிக்கும் வீடியோ காட்சிகள் பதிவாகியுள்ளது.

அந்த காட்சிகளை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் இது குறித்து காவல்துறையில் புகாரளித்தனர். புகாரின் அடிப்படையில் ரஜினி மீது சட்டப்பிரிவு 308 இன் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த மே மாதம் 20 ஆம் தேதி எடுக்கப்பட்ட குழந்தையை தாக்கும் சிசிடிவி காட்சி, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நவீனமயமாக்கப்பட்ட இந்த உலகில், தற்போது பெற்றோர்கள் வேலைக்கு செல்ல வேண்டிய நிர்பந்தத்தில் தள்ளப்பட்டாலும், தங்கள் குழந்தைகள் விசயத்தில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.

Also Read: பணக்கார வீட்டு ஆண்கள்தான் டார்கெட்.. சினிமா பாணியில் கட்டாய திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார் !