India

முகமது நபிகள் குறித்து அவதூறு கருத்து.. இஸ்லாமியர்களின் போராட்டத்தில் வன்முறையைத் தூண்டிய ‘RSS’ கும்பல் !

பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா கடந்த மே மாதம் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர், இஸ்லாமிய மதத்தை பற்றியும், முகமது நபியை பற்றியும் எதிர் கருத்து தெரிவித்திருந்தார். இவரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் புகாரளித்தனர். இதையடுத்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக நுபுர் சர்மாவிற்கு எதிராக மகாராஷ்டிராவில் இரண்டு வழக்குகள் தொடரப்பட்டது.

இந்த நிலையில், இவரது கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் சிறுபான்மை சமுதாயத்தினர் நகரின் முக்கியமான 'பராதே மார்க்கெட்'-டில் கடைகளை மூடும்படி சிறுபான்மை சமுதாயத்தினர் கேட்டுக்கொண்டனர். ஆனால் அதற்கு மற்றொரு தரப்பினர் கடையை மூடக்கூடாது என வியாபாரிகளை எச்சரித்தனர்.

இதனால் பராதே மார்க்கெட்டில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் ஒருகட்டத்தில் மோதலாக மாறியது. இதில் இந்துத்வா கும்பலைச் சேர்ந்த ஒரு தரப்பினர், மற்றொரு தரப்பினர் மீது கல்வீச்சித் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலின் போது, பெட்ரோல் வெடிகுண்டுகளும் வீசப்பட்டதால் போராட்ட களம், வன்முறை காடாக காட்சியளித்தது. பின்னர் தகவலறிந்து வந்த காவல்துறையினர், கூட்டத்தை கலைக்க தடியடி நடத்தியதோடு, கண்ணீர் புகைக்குண்டுகளையும் வீசி கூட்டத்தைக் கலைத்தனர்.

இது குறித்து கான்பூர் கமிஷனர் விஜய் சிங் கூறுகையில், தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், மேலும் வன்முறை ஏற்படாமல் இருக்கவும் ஆயுதம் தாங்கிய 12 கம்பெனி சிறப்பு காவல் படையை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதோடு, முதற்கட்டமாக கலவரத்தில் ஈடுபட்டவர்களில் 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்காணிப்பு கேமரா உதவியுடன் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் குற்றவாளிகளின் சொத்துக்கள் மூடப்பட்டு, அவற்றை புல்டோசர் மூலம் இடிக்கப்படும் என்றும், இந்த சம்பவத்தில் ஈடுப்பட்டதாக மொத்தம் 1,000 பேர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் விஜய் சிங் தெரிவித்துள்ளார்.

முகமது நபிக்கு எதிராக கருத்து தெரிவித்த பா.ஜ.க செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவை கைது செய்து சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவுறுத்தியுள்ளார்.

Also Read: மெட்ரோ ரயிலில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. பட்டப்பகலில் நடந்த கொடூரம் - ‘பகீர்’ வாக்குமூலம்!