India

நூறாவது நாள் பட பாணியில்.. கூடுதல் வரதட்சணை தராத மனைவியை வீட்டின் சுவற்றில் புதைத்த கொடூர கணவன்!

ஆந்திராவைச் சேர்ந்தவர் ராகவா ரெட்டி. இவர் புல்லா ரெட்டி ஸ்வீட்ஸ் என்ற பெயரில் தெலங்கானா மற்றும் ஆந்திராவில் 200க்கும் மேற்பட்ட ஸ்வீட்ஸ் கடைகளை நடத்தி வருகிறார். இவரது மகன் ஏக் நாத் ரெட்டி. இவருக்குக் கடந்த 2014ம் ஆண்டு பெங்களூருவைச் சேர்ந்த தொழில் அதிபரின் மகள் பிரகண்யா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்திற்கு வரதட்சணையாகப் பெண் வீட்டார் ரூ.1 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பில் சீர் வரிசை கொடுத்துள்ளனர். மேலும் மாப்பிள்ளைக்கு ரூ.75 லட்சம் ரொக்கமாகத் திருமணத்தின் போதே கொடுத்துள்ளனர். இருப்பினும் மாப்பிள்ளையின் பெற்றோர் மகன் பெயரில் ஹைதராபாத்தில் ஒரு வணிக வளாகம் வரதட்சணையாகக் கேட்டுள்ளனர்.

இதற்கு பிரகண்யாவின் பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மனைவியை அடித்து கொடுமை படத்தி வந்துள்ளார் ஏக் நாத் ரெட்டி. இதையடுத்து மனைவியை விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இவரின் விவாகரத்து மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஏக்நாத் ரெட்டி மனைவி தங்கி இருந்த அறையின் மின்சாரத்தை, தண்ணீர் இணைப்பையும் துண்டித்துள்ளார்.

மேலும் மனைவி மற்றும் தனது 7 வயது மகள் அந்த அறையை விட்டு வெளியே வராமல் இருக்கத் தடுப்புச் சுவர் ஒன்றைக் கட்டியுள்ளார். இதனால் அவர்கள் அறை முழுமையாக இருட்டாகி, காற்றுகூட இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இவரும் மூச்சுவிட முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளது. இது குறித்து தனது பெற்றோருக்கு பிரகண்யா தகவல் கொடுத்துள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனே போலிஸாரில் புகார் தெரிவித்துள்ளனர். பிறகு போலிஸார் ஏக் நாத் ரெட்டியின் வீட்டிற்கு வந்து, அறையின் முன்பு கட்டி எழுப்பப் பட்டிருந்த தடுப்புச் சுவரை உடைத்து பிரகண்யாவையும் அவரது மகனையும் மீட்டனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஏக்நாத் ரெட்டியை தேடி வருகின்றனர்.

Also Read: கொடுத்த பணத்தைத் திருப்பி கேட்டதால் ஆத்திரம்.. பாட்டியின் கழுத்தை அறுத்த கொடூர பேரன்!