India

“தேர்வு எழுதிவிட்டு வெளியேவந்த 12ம் வகுப்பு மாணவன் பரிதாப பலி” - பள்ளி வளாகத்தில் நடந்த சோகம் !

ஆந்திர மாநிலம், திருப்பதியைச் சேர்ந்தவர் வெங்கட சதீஷ். இவர் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியுள்ளதால் மாணவர் சதீஷ் நேற்று ஆங்கில தேர்வு எழுத பள்ளிக்குச் சென்றுள்ளார்.

பிறகு தேர்வை எழுதி முடித்து விட்டு மகிழ்ச்சியாக தனது நண்பர்களுடன் வீட்டிற்குச் செல்வதற்காகப் பள்ளியை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது சதீஷ் சக மாணவர்களிடம் நெஞ்சு வலிக்கிறது என கூறியுள்ளார். இதனால் மாணவர்கள் இது குறித்து பள்ளி அருகே இருந்த காவலர்களிடம் கூறியுள்ளனர்.

பின்னர் போலிஸார் உடனே ஆம்புலன்ஸூக்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆனால் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் போலிஸாரே தங்களது வாகனத்தில் மாணவன் சதீஷை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, மாணவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “சாப்பிட காசு கேட்ட 6 வயது சிறுவன் கழுத்து நெரித்து கொலை” - மத்திய பிரதேச காவலர் வெறிச்செயல் !