India

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து வன்கொடுமை - அந்தரங்க படங்களை காட்டி மிரட்டியவர் சிக்கியது எப்படி?

இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில், தொடர்ந்து பல பெண்களை காதல் வசமாக்கி அவர்களை பாலியல் வன்கொடுமை செய்யும் அவலம் அதிகரித்துள்ளது. அப்படி ஒரு சம்பவம் மகாராஷ்டிராவில் அரங்கேறியுள்ளது. பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அவர்களது அந்தரங்கப் புகைப்படங்களை வைத்து மிரட்டி வந்த ஒருவன் காவல்துறையின் தீவிர தேடுதலுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளான்.

மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியைச் சேர்ந்தவர் ஜித்து என்கிற அசோக் சுரவேஸ். இவர்மீது கடந்த சில நாட்களுக்கு முன்பாக 23 வயது இளம் பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். இளம் பெண் அளித்த அந்த புகாரில், “எனக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்தைக் கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்தனர். அதன்பின்னர் என்னுடைய அந்தரங்க படத்தை எடுத்து, அதை வைத்து தன்னை மிரட்டி வந்தனர். மேலும் எனக்கு திருமணம் என்ற தெரிந்த பிறகு எனக்கு பார்த்த மாப்பிள்ளை வீட்டில் இந்தப் படங்களைக் காட்டி திருமணத்தை நிறுத்தினர்” எனத் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையின் அந்த விசாரணையில், “ஜித்து ஏற்கனவே பல பெண்களை ஏமாற்றியது தெரியவந்துள்ளது. ஜித்து பல பெண்களிடம் காதல் கொள்வது போல பழகி அவர்களை தனியாக அழைத்து சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளதுள்ளார். மேலும் அவர் பல பெண்களை நிர்வாணமாகப் படம் எடுத்து அதை வைத்து மீண்டும் அவர்களிடம் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது தெரியவந்துள்ளது.

அதுமட்டுமல்லாது, ஜித்து அவரின் இருப்பிடத்தை அடிக்கடி மாற்றி வந்துள்ளார். மேலும் அவர் பயன்படுத்தி வந்த மொபைல் எண்களையும் மாற்றி வந்துள்ளார். அவரின் மொபைல் எண்ணை வைத்து ட்ரேஸ் செய்ததில் முதலில் மகாராஷ்டிராவிலிருந்து கர்நாடகா சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் அவர் கோவாவில் இருப்பதை உறுதி செய்த பின்னர், அவரை பிடிக்க புனே தனிப்படை காவல்துறையினர் சென்றனர். பின்பு அங்கிருந்த அவரை கைது செய்தனர்.

கோவாவில் இருந்து அவரை புனே அழைத்துவந்து விசாரணை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் , பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய நபரை கைது செய்ததால் பொதுமக்கள் காவல்துறையினரை பாராட்டி வருகின்றனர்.

Also Read: நடுரோட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - ராஜஸ்தானில் நடந்த கொடூரம் !