India

ஆப்கானில் கொல்லப்பட்ட டேனிஷூக்கு ‘புலிட்சர் விருதுகள்’ : தட்டித்தூக்கிய இந்தியர்கள் - பட்டியல் இதோ..!

1) இந்த ஆண்டுக்கான புலிட்சர் விருதுகள்!

இதழியல், புத்தகம், நாடகம், இசைத்துறை சாதனையாளர்களுக்கு ஆண்டுதோறும் புலிட்சர் விருது வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் 2022 ஆண்டுக்கான புலிட்சர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப்பட்டியலில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் இந்தியாவை சேர்ந்த புகைப்படக்காரர்களான அட்னன் அபிதி, காஷ்மீர் பெண் புகைப்படக்காரரான சன்னா இர்ஷாத் மாட்டூ, அமித் தேவ் மற்றும் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட டேனிஷ் சித்திக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கொரோனாவின்போது உலகம் கண்ட கொடூரங்களை புகைப்படங்களாக பதிவு செய்ததற்காக feature புகைப்படங்கள் என்ற பிரிவில் விருதுகள் அறிவிக்கப்பட்டன.

2) மெக்சிகோவில் மேலும் 2 பத்திரிகையாளர்கள் சுட்டுக் கொலை!

மெக்சிகோ நாட்டின் வெராகுருஸ் மாகாணத்தில் பத்திரிகையாளர்கள் இருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். யெஸ்சினியா மொலிண்டோ பால்கனி, ஷீலா ஜோஹானா கார்சியா ஒலிவரா ஆகியோர் ஆன்லைன் மீடியாவில் இயக்குனர் மற்றும் நிருபராக வேலை பார்த்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது. நடப்பு ஆண்டில் பத்திரிகையாளர் மீது நடைபெற்ற 10 மற்றும் 11வது தாக்குதல் இதுவாகும். 2022-ம் ஆண்டில் மட்டும் 11 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2000 ஆண்டு முதல் தற்போதுவரை 100க்கு மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3) ஈக்வடார்: சிறையில் பயங்கர கலவரம் - 43 கைதிகள் உயிரிழப்பு !

ஈக்வடார் நாட்டில் சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 40க்கும் மேற்பட்ட கைதிகள் உயிரிழந்தனர். அந்நாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சான்டா டொமிங்கா நகரில் உள்ள சிறையில் கைதிகளுக்கு இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டு, கலவரமாகி உள்ளது. இதில், 43 கைதிகள் உயிரிழந்த நிலையில், கலவரத்தில் உயிரிழந்த கைதிகளின் உறவினர்கள் சிறைக்கு வெளியே சோகத்துடன் காத்திருக்கின்றனர்.

4) சீனாவின் வர்த்தகம் வீழ்ச்சி

கொரோனாவை கட்டுப்படுத்த தொழில் நகரங்களில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால், சீனாவின் வர்த்தகம் வீழ்ச்சி அடைந்தது. உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய பொருளாதார வல்லரசாக சீனா திகழ்ந்து வருகிறது. பிற நாடுகளில் இருந்து சீனாவுக்கு இறக்குமதி செய்யப்படுவது சற்று அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பணவீக்கமும், வட்டி விகிதமும் அதிகமாக உள்ளது. இதனால், சீன பொருட்களின் தேவை சரிந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால், சீனாவின் வர்த்தகம் வீழ்ச்சி அடைந்துள்ளது. நடப்பு காலாண்டிலும் இந்த சரிவு தொடரும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

5) சேதம் அடைந்த கட்டிடத்தில் இருந்து 44 பேர் சடலமாக மீட்பு: உக்ரைன் பகீர் தகவல்

உக்ரைன் ரஷ்ய போர் இரண்டு மாதங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. இந்நிலையில் கார்கிவ் பகுதியில் ரஷிய தாக்குதலில் சேதம் அடைந்த ஒரு கட்டிட இடிபாடுகளில் இருந்து 400 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக கார்கிவ் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கார்கிவ் நகர நிர்வாகி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில் இந்த தகவலை தெரிவித்தார். அப்பாவி பொதுமக்களுக்கு எதிரான ரஷிய படைகள் நடத்திய மற்றுமொரு கொடூரமான போர்க்குற்றம் இது என்றும் தெரிவித்துள்ளார். எனினும் கார்கிவ் பகுதியில் எந்த இடத்தில் இந்த கட்டிடம் உள்ளது என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

Also Read: 5IN1_WORLD | ரஷ்ய தூதர் மீது சிவப்பு சாயம் வீசிய போராட்டக்காரர்கள் : வடகொரியாவுக்கு தென் கொரியா அழைப்பு!