India

இலங்கையாக மாறும் இந்தியா?; சமையல் சிலிண்டர் விலை ரூ.1,000 உயர்வு: ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் மோடி அரசு!

இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில், சமையல் எரிவாயு முதன்முறையாக 1,000 ரூபாயைத் தாண்டியுள்ளது. அதாவது, 14.2 கிலோ எடை கொண்ட வீட்டுப் பயன்பாட்டிற்கான ஒரு எரிவாயு சிலிண்டரின் விலை 1,015 ரூபாய் உயர்ந்துள்ளது. கடந்த மே 1 அன்று வர்த்தகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டரின் விலையை மட்டுமே மோடி அரசு உயர்த்தி இருந்தது. 19 கிலோ வர்த்தகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்ட ரின் விலை, ஒரேநாளில் 102 ரூபாய் உயர்த்தப்பட்டதன் காரணமாக, அதன் விலை 2,355 ரூபாயாக அதிகரித்தது.

வீட்டுப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு 2 மாதமாக உயர்த்தப்படாமல் இருந்து வந்தது. அதன் விலை ரூ.965.50 இருந்து வந்தது. இந்நிலையில், சனிக்கிழமையன்று வீட்டுப் பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலையையும் மோடி அரசு சிலிண்டர் ஒன்றுக்கு 50 ரூபாய் உயர்த்தியுள்ளது.

இதன் காரணமாக, இந்திய வரலாற்றில் முதன்முறையாக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ.1,000 மேல் உயர்த்தி, ஏழை, நடுத்தர மக்களின் வயிற்றிலடித்த முதல் பிரதமர் என்ற சாதனையை மோடி படைத்துள்ளார்.

கடந்த 2021 ஜனவரியில் வீட்டுப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 710 ரூபாயாக இருந்தது. இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, கடந்த 2021 அக்டோபர் 6-ஆம் தேதி ரூ.915.50 என்ற அளவிற்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் பின்னர், 2022 மார்ச்சிலும் 50 ரூபாய் உயர்த்தப்படவே சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.965.50 ஆக அதிகரித்தது.

தற்போது மேலும் 50 ரூபாய் விலை உயர்த்தப்பட்ட நிலையில், சிலிண்டர் ஒன்றின் விலை 1,015 ரூபாய் ஆக அதிகரித்துள்ளது. கடந்த 17 மாதங்களில் சிலிண்டர் ஒன்றுக்கு 315 ரூபாயும், 2022-ஆம் ஆண்டின் முதல் 5 மாதங்களில் மட்டும் 100 ரூபாயும் சிலிண்டர் விலையை மோடி அரசு உயர்த்தியுள்ளது.

Also Read: “வயதான தம்பதி கொலை : 50Kg நகை, கோடிக்கணக்கில் பணம் கொள்ளை”.. துப்பு துலங்கியது எப்படி? - ஷாக் ரிப்போர்ட்!