India

“13 கோடி இந்தியர்களுக்கு நீங்களா வேலை தருவீர்கள்?” : மோடி அரசை வெளுத்து வாங்கிய சந்திரசேகர் ராவ்!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் 21வது ஆண்டு தொடக்க விழாவில் அதன் தலைவர் சந்திரசேகர்ராவ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

அப்போது பேசிய அவர், “நாட்டில் மதக்கலவரத்தை பா.ஜ.க அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெல்லியில் நடைபெற்ற ஊர்வலத்தில் வாள்கள் மற்றும் துப்பாக்கிகளுடன் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாத்மா காந்தியைக் கொன்ற கொலையாளியை வணங்குகிறார்கள். அதனையெல்லாம் நாட்டு மக்கள் கண்காணித்து வருகின்றனர்.

நாடு பல்வேறு பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கிறது. மத வெறுப்பைத் தூண்டுகிறார்கள். மதவெறி சண்டைகளால் நாட்டிற்கு என்ன செய்ய விரும்புகிறீர்கள்? மத ஊர்வலங்களில் வாள்கள் மற்றும் துப்பாக்கிகளை வைத்திருப்பதன் மூலம் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? ஹிஜாப் மற்றும் ஹலால் அரசியல் அழிவையே தரும். 13 கோடி இந்தியர்கள் வெளிநாட்டில் வேலை செய்கிறார்கள், நீங்கள் எங்கள் மதத்தைச் சேர்ந்தவர் அல்ல என்று அந்த நாடுகள் சொன்னால், இந்த அரசு அவர்களுக்கு வேலை தருமா?

நாட்டில் ஜி.டி.பி வீழ்ச்சி, விலைவாசி உயர்வு போன்ற பல்வேறு பிரச்சனையை சமாளிக்க ஒன்றிய அரசு தவறிவிட்டது. அதேவேளையில், புல்வாமா தாக்குதல், சர்ஜிக்கல் ஸ்டிரைக் மற்றும் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' போன்ற திரைப்படங்களைக் கூட பா.ஜ.க அரசு அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்துகிறது.

அதுமட்டுமல்லாது, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், அம்மாநில அரசுகளுக்கு இடையூறு ஏற்படுத்தவே ஆளுநர் அமைப்பை ஒன்றிய அரசு பயன்படுத்துகிறது. மேலும் ஆளுநர்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்படுகின்றனர். ஆளுநர் பதவியே தேவையில்லை.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: உதகை புகைப்பட தொழிற்சாலையை விற்க நோட்டீஸ்.. பொதுத்துறையை தொடர்ந்து சூறையாடும் மோடி அரசு: ‘பகீர்’ பின்னணி!