India

அரசு இடம் பேரில் நில அபகரிப்பு.. வெளிநாட்டினரை ஆபாசமாக மிரட்டும் பாஜக எம்.எல்.ஏ.. புதுவையில் அராஜகம்!

புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஜோனா என்பவர் தனது குடும்பத்தினருடன் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார். இந்நிலையில் அவர் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக, காலாப்பட்டு தொகுதி பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் கல்யாண சுந்தரத்திற்கு புகார் சென்றதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக இன்று சம்பந்தப்பட்ட இடத்திற்கு காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் தன்னுடைய ஆதரவாளர்களை பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் கல்யாண சுந்தரம் அழைத்து சென்றுள்ளார்.

அப்போது வெளிநாட்டைச் சேர்ந்த ஜோனா தன்னுடைய பாதுகாப்பிற்காக அங்கு நடைபெற்ற சம்பவங்களை தன்னுடைய செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் ஜோனாவை ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதோடு, அந்த செல்போனை பிடுங்கி உடைக்குமாறு தன்னுடைய ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து ஜோனாவிடமிருந்து செல்போனை பிடிங்கிய கல்யாண சுந்தரத்தின் ஆதரவாளர்கள் ஜோனவை தாக்கியுள்ளனர். போலிஸார் முன்னிலையிலேயே நடைபெற்ற பா.ஜ.கவினரின் இந்த அராஜக செயலால் வெளிநாட்டினர் செய்வதறியாது திகைத்து நின்றனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக தூதகரத்தில் புகார் அளிக்க வெளிநாட்டினர் முடிவு செய்துள்ளனர்.

பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் கல்யாண சுந்தரம் ஏற்கனவே புதுச்சேரி மாநிலத்தின் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தபோது தன்னுடைய 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை, ஆள்மாறாட்டம் செய்து எழுதிய குற்றத்திற்காக சிறை சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரியில் பேனர் தடை சட்டத்தை மீறி ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை வரவேற்று பேனர் வைத்தவர்கள் மீது புகார் அளிக்க சென்ற சமூக ஆர்வலரை போலிஸார் முன்னிலையில் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரத்தின் கொலைவெறி தாக்குதல் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி புதுச்சேரியில் தொடர்ந்து பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அராஜக செயல்களில் ஈடுபட்டுவருவது புதுச்சேரி மக்களை அச்சமடையச் செய்துள்ளது.

Also Read: வெறுப்பு பேச்சை தடுக்க என்ன நடவடிக்கைதான் எடுத்திருக்கிறீர்கள்? - பாஜக மாநில அரசுகளுக்கு கடும் கண்டனம்!