India

கர்ப்பிணிகள் வரை பாதிப்பை ஏற்படுத்தும் நிலக்கரி பிரச்சனை.. செல்போன் வெளிச்சத்தில் பெண்ணுக்கு பிரசவம்!

இந்தியாவில் கடந்த ஆண்டு இறுதியில் பல்வேறு மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் பல இடங்களில் கடும் மின்வெட்டு பிரச்சனை எழுந்தது. தற்போது மீண்டும் இதே பிரச்சனை உருவெடுத்துள்ளது.

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக வடமாநிலங்களில் கடும் மின்வெட்டு பிரச்சனை தற்போது பூதாகரமாக மாறியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு கூட காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலக்கரி தட்டுப்பாடு குறித்து மோடி அரசை விமர்சித்து ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

நிலக்கரி தட்டுப்பாட்டைப் போக்க விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து ஒன்றிய அமைச்சகம் நிலக்கரி தட்டுப்பாட்டைப் போக்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட பல மணி நேர மின்வெட்டு காரணமாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு செல்போன் டார்ச் வெளிச்சத்தில் பிரசவம் பார்க்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

ஒடிசா மாநிலம், கஞ்சம்போல்சாரா பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. அருகே இருக்கும் கிராமங்களை சேர்ந்த ஏழை, எளிய கர்ப்பிணி பெண்கள் இங்கு பிரசவம் பார்த்து வருவது வழக்கம். தற்போது இந்த மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடும் மின்வெட்டு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணி பெண்கள் உட்பட பலரும் அவதிப்பட்டு வருருன்றனர்.

இந்நிலையில் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில், சம்பவத்தன்று இளம்பெண் ஒருவருக்கு பிரசவம் பார்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இங்கு ஜெனரேட்டர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் மின் விளக்குகளை இயக்க முடியவில்லை.

இதனால் மருத்துவர்கள் செல்போன் டார்ச் லைட் மற்றும் மெழுகுவர்த்தி ஏற்றி அந்தப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளனர். இதையடுத்து அந்தப் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. மேலும் மருத்துவமனையில் இருந்த நோயாளிகளுக்கு செல்போன் வெளிச்சத்திலேயே சிகிச்சை செய்துள்ளனர்.

இதையடுத்து இந்த மருத்துவமனையில் ஜெனரேட்டர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read: “பேருந்தில் மயங்கி விழுந்த இளைஞர்; CPR முதலுதவி மூலம் உயிரை காப்பாற்றிய செவிலியர்”: கேரளாவில் நெகிழ்ச்சி!