India

“எனக்கு ரெண்டு கையுமே இல்ல.. நான் எப்படி கல்லெறிய முடியும்?” : குற்றம்சாட்டப்பட்ட இளைஞர் கண்ணீர்!

மத்திய பிரதேச மாநிலத்தின் கார்கோன் பகுதியில் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி ராமநவமி அன்று இரு சமூகத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், கல்வீச்சில் ஈடுபட்டதாக இரு கைகளையும் இழந்தவர் குற்றம்சாட்டப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் கார்கோன் பகுதியில் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி ராமநவமி அன்று இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டு அது பெரும் வன்முறையாக வெடித்தது. இந்த மோதலில் பலர் காயமடைந்தனர். கடைகள், வீடுகளுக்கு தீவைக்கப்பட்டன.

இந்நிலையில், கலவரம் நிகழ்ந்த பகுதியில் ஏராளமான ஆக்கிரமிப்பு வீடுகளும், கடைகளும் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு வீடுகளும், கடைகளும் இடித்துத் தள்ளப்பட்டன.

கார்கோன் வன்முறையில் கல்வீச்சில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட வாசிம் ஷேக் என்பவரின் வீடும் இடிக்கப்பட்டது. 2005ஆம் ஆண்டு நடந்த விபத்தில் இரண்டு கைகளையும் இழந்தவர் வாசிம் ஷேக்.

இதனால் பாதிக்கப்பட்ட வாசிம் ஷேக், “நான் எனது கடையை சுமார் 12 ஆண்டுகளாக இங்கு நடத்தி வருகிறேன். என் குழந்தைகளும், வயதான தாயும் என்னை நம்பியே இருக்கிறார்கள்.

சாப்பிடவும் தண்ணீர் குடிக்கவுமே எனக்கு இன்னொருவரின் உதவி தேவை. அப்படி இருக்கையில் கைகளற்ற நான் எப்படி கல்லெறிவேன்?” என அவர் பரிதாபமாகக் கேட்டுள்ளார்.

கல்வீச்சில் ஈடுபட்டதாக இரு கைகளையும் இழந்தவர் குற்றம்சாட்டப்பட்டு, அவரது கடை இடிக்கப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “பாலியல் குற்றங்களுக்கு Live-in Relationships தான் காரணம்”: மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் சர்ச்சை கருத்து!