India

மணி வாங்க வந்த குறவர்இன சிறுமியிடம் சில்மிஷம்: புதுவை பேன்சி கடை உரிமையாளரை சிறையில் அடைக்கச் செய்த தாய்!

கடைக்கு பொருட்கள் வாங்க வந்த நரிக்குறவ இனத்தை சேர்ந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, பேன்சி ஸ்டோர் உரிமையாளரை போலிஸார் போஸ்கோ சட்டத்தில் கைது செய்தனர்.

புதுச்சேரி சுப்பையா நகரை சேர்ந்தவர் சங்கர்லால் (வயது 42). இவர், புதிய பேருந்து நிலையம் அருகே பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். இந்த கடையில் நரிக்குறவ பெண்கள் ஊசி பாசி மணி மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை மொத்தமாக வாங்கி பேருந்து நிலையம் மற்றும் கடற்கரை சாலை பகுதியில் விற்பது வழக்கம்.

அதுபோல் கணவரை இழந்த ஒரு நரிக்குறவ பெண் தனது 12 வயது மகளுடன் சங்கர்லால் கடைக்கு சென்று ஊசி பாசி மணிகள் வாங்கி வந்தார். ஒரு முறை தனது மகளை அனுப்பி சங்கர்லால் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வருமாறு கூறியதாக தெரிகிறது.

அப்போது சங்கர்லால் அந்த சிறுமியிடம் பாலியல் ரீதியாக சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதுபற்றி அந்த சிறுமி தனது தாயிடம் கூறி அழுதுள்ளார். இதையடுத்து அந்த பெண் இதுகுறித்து உருளையன்பேட்டை காவல்நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் பேரில் போலிஸார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சங்கர்லாலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Also Read: பாஜக தலைவர் பிறந்த நாள் விழாவில் பாதுகாப்பில்லாத பந்தல் சரிந்து 10க்கும் மேலான பெண்கள் படுகாயம்!