India

முன்பு நூலகம்.. தற்போது கோச்சிங் சென்டர்.. சட்டமன்ற அலுவலகத்தை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த திமுக எம்.எல்.ஏ

புதுச்சேரி மாநிலம் பாகூர் தொகுதியின் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை பாகூர் தொகுதியை சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு பயனளிக்கும் வகையில், அரசு வேலை வாய்ப்புக்கான இலவச பயிற்சி மையமாக மாற்றியுள்ளார்.

இந்த பயிற்சி மையத்தை சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், புதுச்சேரி மாநில அமைப்பாளருமான இரா.சிவா திறந்து வைத்து, பயிற்சிக்கு வந்தவர்களுக்கு எழுது பொருட்களை வழங்கினார்.

சுமார் 100 மாணவர்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பயிற்சி மையத்தில், முதுநிலை எழுத்தர், இளநிலை எழுத்தர், காவலர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பல்வேறு அரசு பணியிடங்களுக்கான தேர்வுக்கு, தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் மற்றும் துறை சார்ந்த வல்லுநர்களை கொண்டு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது.

கிராமப்புற இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தையே பயிற்சி மையமாக மாற்றியுள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமாருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே பாகூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் ஒரு பகுதியில் பொதுமக்கள், மாணவர்களின் நலனுக்காக ஏற்கெனவே நூலகம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக பேசியுள்ள பாகூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், ’திராவிட மாடல் ஆட்சியில் இது ஒரு புதிய அத்தியாயம்’ எனக் கூறியுள்ளார்.

Also Read: தி.மு.கவுக்கு பெருமை சேர்த்த பெண் கவுன்சிலர்.. முதலமைச்சரால் பாராட்டப்பட்ட இந்த புஷ்பாவதி யார்?