India

புதுவையில் பைக்கை திருடிய அரசு ஊழியர்.. கைது செய்து விசாரித்த போலிஸாரை திடுக்கிட வைத்த வாக்குமூலம்!

புதுச்சேரி அரசு ஊதியம் வழங்காததால், பண தேவைக்காக உணவக உரிமையாளரின் வாகனத்தை அரசு ஊழியர் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி பாரதி வீதியில் உணவகம் நடத்தி வருபவர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சக்திவேல். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது இருசக்கர வாகனத்தை சாவியுடன் கடையின் வெளியே நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.

சிறிது நேரத்தில் வெளியே வந்து பார்த்தபோது அவரது இரு சக்கர வாகனம் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில், 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சக்திவேலின் இருசக்கர வாகனத்தை திருடி செல்வது பதிவாகி இருந்தது.

உடனே அவர் சிசிடிவி காட்சிகளுடன் ஒதியஞ்சாலை காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலிசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி கேமிராவில் பதிவான உருவத்தை கொண்டு விசாரணை மேற்கொண்டதில், இருசக்கர வாகனத்தை திருடி சென்றது கந்தப்பா முதலியார் வீதியை சேர்ந்த ஸ்டாலின் (53) என்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலிசார் அவரிடம் நடத்திய விசாரணையில், புதுச்சேரி அரசின் சார்பு நிறுவனமான பாசிக்கில் பணிபுரியும் ஸ்டாலின், நீண்ட நாட்களாக சம்பளம் வழங்காத காரணத்தினால், பணத் தேவைக்காக சாவியுடன் இருந்த இருசக்கர வாகனத்தை திருடியாதாக தெரிவித்துள்ளார்.

பின்னர் அவரிடமிருந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலிசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

அரசு நிறுவனத்தில் ஊதியம் வழங்காத காரணத்தினால், அரசு ஊழியர் ஒருவர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுப்பட்டது புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் நிலவும் மோசமான நிதிநிலைமை காரணமாக, பல்வேறு அரசு சார்பு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பல ஆண்டுகளாக ஊதியம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.