India

மளமளவென தீப்பிடித்து எரிந்த பேருந்து.. சமயோசிதமாக செயல்பட்டு பயணிகளை காப்பாற்றிய ஓட்டுநர் - நடந்தது என்ன?

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நேற்று நகரப் பேருந்து ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தின் முன்பகுதியில் திடீரென புகை வந்துள்ளது.

இதைப் பார்த்து சந்தேகமடைந்த ஓட்டுநர், உடனே பேருந்தை நிறுத்திவிட்டு, பயணிகள் அனைவரையும் இறக்கி விட்டுள்ளார். பயணிகளை இறக்கிவிட்ட பின் புகை வந்த இடத்தைப் பார்த்தபோது, திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

மளமளவென பிடித்த தீ பேருந்து முழுவதும் கொளுந்துவிட்டு எரிந்தது. இதையடுத்து அங்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தண்ணீரைப் பீய்ச்சியடித்து நெருப்பை அணைத்தனர்.

பேருந்து ஓட்டுநரின் துரித நடவடிக்கையால், பேருந்தில் இருந்த சுமார் 45 பயணிகளும் எவ்வித பாதிப்பும் இன்றி உயிர்தப்பினர். டிரைவர் கேபினில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட்டால் தீப்பற்றியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த தீ விபத்து குறித்து நாக்பூர் முனிசிபல் கார்ப்பரேஷனின் தலைமை தீயணைப்பு அதிகாரி ராஜேந்திர உச்சகே கூறுகையில், “ரூபம் எலக்ட்ரானிக் மார்க்கெட் அருகே காலை 9.46 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

டிரைவர் மற்றும் கண்டக்டரின் துரித முயற்சியால் பயணிகள் சரியான நேரத்தில் வெளியேற்றப்பட்டதால், அவர்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்" எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: இரவோடு இரவாக தாய் மகன் கொடூரமாக வெட்டிக் கொலை... திண்டுக்கல் அருகே அதிர்ச்சி!