India

படுக்கை அறையில் கேமரா வைத்து கண்காணித்த சைக்கோ கணவன்... விபரீத முடிவெடுத்த பத்திரிகையாளர்!

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் சுருதி நாராயணன். இவருக்குக் கடந்த 2017ஆம் ஆண்டு அனீஷ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகியும் இன்னும் குழந்தை பிறக்கவில்லை.

மேலும், சுருதி நாராயணன் பெங்களூருவில் உள்ள தனியார் ஊடக நிறுவனம் ஒன்றில் உதவி ஆசிரியராக பணியாற்றி வந்தார். இதனால் அந்த தம்பதிகள் பெங்களூருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், சம்பவத்தன்று அவரது தாய் சுருதிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் பல முறை தொடர்புகொண்டும் அவர் தொலைபேசியை எடுக்கவில்லை. இதனால் அவர் மகள் தங்கியிருக்கும் குடியிருப்பின் காவலாளியை தொடர்புகொண்டு, மகள் போன் எடுக்காதது குறித்துக் கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த காவலாளி, அவர்கள் குடியிருப்பிற்குச் சென்று பார்த்தபோது கதவு உள்பக்கமாகப் பூட்டியிருந்தது. பின்னர் பால்கனி வழியாக காவலாளி, வீட்டிற்குள் சென்று பார்த்தபோது சுருதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார்.

இதுகுறித்து போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த போலிஸார் சுருதி உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் பெண் ஊடகவியலாளர் தற்கொலை குறித்து விசாரணை செய்தபோது கணவன் கொடுமைப்படுத்தியதாலே அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

இருவருக்கும் திருமணம் ஆனதில் இருந்தே மனைவி சுருதியை அவரது கணவர் அனீஸ் அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். மேலும் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் தங்களது அறையில், கேமரா மற்றும் வாய்ஸ் ரெக்கார்டர்களை வைத்து மனைவியைத் தினமும் கண்காணித்து வந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து போலிஸார் அனிஷ் மீது வழக்குப் பதிவு செய்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவன் கொடுமையால் பெண் ஊடகவியலாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “மனைவியின் சம்மதமின்றி கணவன் பாலியல் ரீதியாக அத்துமீறுவதும் பாலியல் வன்கொடுமைதான்”: ஐகோர்ட்டு அதிரடி !