India

“இதுதான் திட்டம்” : எம்.பி பதவியை ராஜினாமா செய்த அகிலேஷ்.. அடுத்தது என்ன?

உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற அகிலேஷ், தனது மக்களவை எம்.பி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

உத்தர பிரதேச தேர்தலில், பா.ஜ.க கூட்டணி 273 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. கடந்த தேர்தலில் 47 தொகுதிகளில் மட்டுமே வென்ற சமாஜ்வாதி கட்சி, இந்தத் தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 125 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. சமாஜ்வாதி மட்டும் தனியாக 111 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.

உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்ட அகிலேஷ், கர்ஹால் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். பா.ஜ.க வேட்பாளரை அகிலேஷ் 67,504 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

இதற்கு முன் அவர் முதல்வராக இருந்தபோதிலும் மேல்சபை உறுப்பினராக இருந்தார். இந்நிலையில், இந்தத் தேர்தலில்தான் கர்ஹால் தொகுதியில் முதல்முறையாக நேரடியாகப் போட்டியிட்டு வென்றார்.

தற்போது அசம்கர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருக்கும் அகிலேஷ் இரண்டில் ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டும் எனும் நிலையில் அகிலேஷ் மக்களவை எம்.பி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன் அகிலேஷ், உ.பி அரசியல் களத்தில் மிகத்தீவிரமாக ஈடுபடாததே தோல்விக்கு காரணம் என விமர்சிக்கப்பட்டது. உத்தர பிரதேசத்தில் நேரடியாக யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து அரசியல் செய்யவே அகிலேஷ் தனது மக்களவை எம்.பி பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: அன்று யோகிக்கு கறுப்புக் கொடி.. இன்று MLA சீட் - உ.பி தேர்தலில் இளம்பெண்ணுக்கு வாய்ப்பளித்த அகிலேஷ்!