India

மட்டன் கறி கிடைக்காததால் விரக்தி; போலிஸிடம் தொந்தரவு செய்தவருக்கு காப்பு; தெலங்கானாவில் நடந்தது என்ன?

காவல்துறையின் அவசர உதவி எண் 100-ஐ தொடர்பு கொண்டு மனைவி குறித்து புகார் கொடுத்த நபரை தெலங்கானா போலிஸார் கைது செய்துள்ள சம்பவம் நல்கொண்டாவில் நடந்துள்ளது.

செர்லா கவுராராம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் 20 வயது மதிக்கத்தக்க நவீன். ஹோலி பண்டிகை நாளான கடந்த மார்ச் 18ம் தேதி தனக்கு பிடித்தமான மட்டன் கறி வாங்கிச் சென்று மனைவியிடம் கொடுத்து சமைத்து தரும்படி சொல்லியிருக்கிறார் நவீன்.

ஆனால் அவரது மனைவியோ மட்டன் சமைக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த நவீன் மனைவியிடம் சண்டையிட்டிருக்கிறார். குடிபோதையில் இருந்த நவீன் சண்டை போட்டதோடு இருந்திடாமல் அவசர உதவி எண்ணான 100க்கு தொடர்ந்து ஐந்து முறை கால் செய்து தனது மனைவி மட்டன் சமைத்து தரமாட்டேன் என்கிறார் என புகார் கூறியிருக்கிறார்.

முதலில் எவரோ விளையாடுகிறார் என எண்ணி போலிஸார் பெரிதுபடுத்தாமல் இருந்திருக்கிறார்கள். ஆனால் மீண்டும் ஆறாவது முறையாக அழைப்பு வந்ததும், நவீனின் தொலைப்பேசி எண் மூலம் அவரது விலாசத்தை கண்டறிந்த போலிஸார், மறுநாள் அவரது வீட்டுக்கேச் சென்று நவீனை கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள்.

காவல்துறைக்கு தொடர்ந்து அழைப்பு விடுத்து தொந்தரவு செய்ததை அடுத்து நவீன் மீது 510, 290 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

Also Read: ‘என்னடா கறியே இல்ல’.. விருந்துக்குச் சென்ற இடத்தில் தகராறு : நண்பனை குத்தி கொடூரமாக கொலை செய்த நண்பர்கள்!