India

“டீசல் விலை ரூ. 25 அதிகரிப்பு” - ஒரேயடியாக உயர்த்தி அதிர்ச்சி கொடுத்த எண்ணெய் நிறுவனங்கள்!

அரசு போக்குவரத்துக் கழகங்கள் உட்பட மொத்தமாக வாங்குவோருக்கு டீசல் விலை லிட்டருக்கு ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் - ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மிக அதிகமாக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் பா.ஜ.க ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது முதல் தொடர்ந்து பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்த்தப்பட்டு வந்த நிலையில், 5 மாநில தேர்தல் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை.

இந்நிலையில், இந்திய எரியெண்ணெய் நிறுவனங்கள் மொத்தமாக வாங்கும் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படும் டீசல் விலையை உயர்த்தியுள்ளன. சில்லறை விலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாத நிலையில் மொத்தமாக வாங்குவோருக்கு மட்டும் விலை ரூ. 25 அதிகரித்துள்ளது.

இதனால் சில்லரை டீசல் விற்பனை நிலையங்களில் குறைவான விலைக்கும் நுகர்வோர் டீசல் விற்பனை நிலையங்களில் அதிக விலைக்கும் டீசல் விற்பனை செய்திடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த விலை அதிகரிப்பால் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு நாள்தோறும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

நாள்தோறும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சுமார் 16 லட்சம் லிட்ட டீசல் கொள்முதல் செய்துவரும் நிலையில் விலை உயர்வை சமாளிக்க சில்லறை விலையில் டீசல் வாங்குவதற்கு எண்ணெய் நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறது.

Also Read: கட்டுக்கடங்காத டீசல் திருடர்கள் அட்டூழியம்.. சுட்டுப்பிடித்த போலிஸ்.. பெங்களூரில் பரபரப்பு!